ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரட்டும், ஜெயிப்போம்.. எடப்பாடி பழனிச்சாமி
ஸ்டாலின் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
டெல்லி: முக. ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டி பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தம்பிதுரை ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
துணை ஜனாதிபதியாக வெங்கைய்யா நாயுடு இன்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசினர்.
அப்போது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும், விவசாயிகள் பிரச்சினை, தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
அப்போது அவரிடம், தமிழக அரசு மீது தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக ஸ்டாலின் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஸ்டாலின் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
ஏற்கனவே ஸ்டாலின் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ளோம். சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் வெற்றி பெற்றோம். மீண்டும் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.