10 பேர் பலியான மே.வங்க பட்டாசு ஆலை விபத்து - உரிமையாளரான திரினமூல் பிரமுகர் கைது!
கொல்கத்தா : மேற்கு வங்க பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை, திரினமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளரான ராஜன் மைட்டி என்பவரால், உரிய அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாக வெடிகுண்டுகள் தயாரிக்கப் பட்டதாக அக்கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தீ விபத்தில் 15 பேர் பலியானதாகவும், ஆனால் போலீசார் 10 பேர் என தவறான தகவலைப் பரப்புவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பட்டாசு ஆலையின் அருகில் இருந்த குடியிருப்புப் பகுதிகளும் இந்த விபத்து காரணமாக கடும் சேதம் அடைந்துள்ளன. பலியானவர்களின் உடல் பாகங்கள் அருகில் உள்ள வீடுகளில் சிதறி விழுந்து கிடப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அதிகாரிகள் மிட்னாப்பூருக்கு விரைந்தனர். விபத்தைத் தொடர்ந்து தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜன் மைட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.