மே.வங்கத்தில் புதிய திருப்பம்: காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இடதுசாரிகள் முடிவு!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இடதுசாரிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுடன் மேற்கு வங்க சட்டசபைக்கும் தேர்தலும் நடைபெறுகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகள் வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வந்தது.
இந்த கூட்டணி குறித்து விவாதிக்க இடதுசாரி முன்னணியில் உள்ள 11 கட்சிகளின் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இக் கூட்டத்துக்குப் பிறகு இடதுசாரி முன்னணியின் தலைவர் பிமன் போஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இடதுசாரி முன்னணியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விருப்பத்துடன் முன்வந்தால், அவர்களுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறோம். காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சு நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை.
ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக, அதே நோக்கத்துடன் செயல்படும் மற்றொரு கட்சியுடன் கூட்டணிப் பேச்சு நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்த இறுதி முடிவை டெல்லி தலைமைதான் முடிவெடுக்கும் என்றார்.
மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மம்தா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க கடும் எதிர்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இடதுசாரி முன்னணியுடன் கூட்டணி அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பும் மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மேற்கு வங்கத்தில் இடதுசாரி முன்னணியுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்திலும் இடதுசாரிகள், காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று பகிரங்கமாக அறிவித்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.