ரசகுல்லா யாருக்குச் சொந்தம்?.. முட்டி மோதும் மேற்கு வங்கம், ஒடிஷா!
கொல்கத்தா: இந்தியாவின் புகழ் பெற்ற இனிப்பு வகையான ரசகுல்லாவை வைத்து மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா மாநிலங்களுக்கிடையே சண்டை வலுத்து வருகிறது. இரு மாநிலங்களுமே எங்களது உணவுதான் ரசகுல்லா என்று உரிமை கொண்டாடி வருகின்றன.
இந்தியாவின் மிக பிரபலமான இனிப்பு வகையில் ஒன்றுதான் ரசகுல்லா. மேற்கு வங்கத்திலும், ஒடிஷாவிலும் இது முக்கியமான இனிப்பு வகையாகும். ஆனால் இரு மாநிலங்களுக்கு இடையேயும் இதுதொடர்பாக கசப்பான மோதல் ஒன்று நீடித்து வருகிறது.
இரு மாநிலங்களும் ரசகுல்லாவுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றன. தங்களது ரசகுல்லாவுக்கே புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஒடிஷா முன்வைக்கும் வாதம் என்னவென்றால், 16ம் நூற்றாண்டு முதலே ரசகுல்லா இருந்து வருகிறது. பல்ராம் தாஸ் எழுதிய தண்டி ராமாயாணத்திலும் இது குறித்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒடிஷாவில் உள்ள கோவில்களில் கடந்த 600 வருடமாக ரசகுல்லா தயாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்கள்.
இதற்கிடையே, ஒடிஷா அரசு ரசகுல்லா விவகாரம் தொடர்பாக 3 கமிட்டிகளையும் அமைத்து அதிரடியாக களம் குதித்துள்ளது. அறிவியல் ரீதியாகவும், பாரம்பரிய ரீதியாகவும், ரசகுல்லா ஒடிஷாவுக்கே சொந்தமானது என்பதை நிரூபிக்கும் வேலைகளில் இந்த கமிட்டிகள் களம் இறக்கப்பட்டுள்ளன. ஒடிஷாவுக்குச் சொந்தமானது ரசகுல்லா என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களையும் இவை திரட்டவுள்ளன.