ஒபாமா வருகையின் போது தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் சதி?
டெல்லி: அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்தியா வருகை தரும் போது மாவோயிஸ்டுகள் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
அமெரிக்கா அதிபர் ஒபாமா ஜனவரி 26-ந் தேதியன்று இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கிறார். ஒபாமாவின் இந்த பயணத்தின் போது ஐ.எஸ்.ஐ.எஸ்., இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா, சிமி, லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உல் முஜாகிதீன் வங்கதேசம் மற்றும் மாவோயிஸ்டுகள் ஆகிய இயக்கங்கள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ்
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவில் அதற்கு தளம் இல்லை. ஆனால் ஆதரவாளர்கள் இருக்கின்றனர். இந்த இயக்கத்தின் மூலமாக இந்தியாவுக்கு உடனடியாக எந்த ஒரு ஆபத்தும் இல்லை. அதே நேரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் தனிநபராக நின்று ஏதேனும் சதிச் செயலில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அல்கொய்தா
இந்திய துணைக்கண்டத்துக்கான அல்கொய்தா என்பது புதிய தீவிரவாத இயக்கம். ஆசிம் உமர் தலைமையிலான இந்திய இயக்கம் இந்தியாவில் இன்னமும் காலூன்றவில்லை. இருப்பினும் ஒபாமா வருகையின் போது ஏதேனும் தாக்குதல் நடத்தி இந்திய துணைக்கண்டத்திலும் கால் பதித்துவிட்டோம் என்று அறிவிக்க வாய்ப்பிருக்கிறது.
சிமி
மத்திய பிரதேச கண்ட்வாலா சிறையில் இருந்து தப்பிய 5 சிமி இயக்க தீவிரவாதிகள் குறித்து உளவுத்துறை பலமுறை எச்சரித்துள்ளது. சிமி இயக்கத்தின் பிரதான இலக்கே அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும்தான்.. இதனால் ஒபாமா வருகையின் போது தாக்குதல் நடத்த சிமி தீவிரவாதிகள் முயற்சிக்கக் கூடும். குறிப்பாக ராஜஸ்தானில் அமெரிக்கர்கள் மீது சிமி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவும் கூட இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
லஷ்கர் இ தொய்பா
லஷ்கர் இ தொய்பாவைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் ராணுவம், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் இயங்கி வருகிறது. ஒபாமா வருகையின் போது லஷ்கர் இ தொய்பா தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பாகிஸ்தானுக்குத்தான் அது பேரழிவாக முடியும் என்பதால் அந்நாடு எந்த ஒரு தாக்குதலையும் லஷ்கர் இயக்கம் மேற்கொள்ளாதவகையில் கண்காணித்து வருகிறது. ஒபாமா வருகையின் போது லஷ்கர் இயக்கம் தாக்குதல் நடத்துவதற்கு மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. ஏற்கெனவே ஒபாமா வருகையின் போது எந்த ஒரு ஊடுருவல் மற்றும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜமாத் உல் முஜாகிதீன்
வங்கதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜமாத் உல் முஜாகிதீன் இயக்கம் இந்தியாவில் வேரூன்றி இருப்பதை மேற்குவங்கத்தின் புர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இந்த இயக்கத்தைச் சேர்ந்த எராளமான திவீரவாதிகள் இந்தியாவில் சிக்கியிருக்கின்றனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஒபாமா வருகையின் போது இந்த இயக்கம் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது.
மாவோயிஸ்டுகள்
இந்த மத தீவிரவாத அமைப்புகளைப் போல மாவோயிஸ்டுகளும் ஒபாமா வருகையின் போது தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் மாவோயிஸ்டுகள் செல்வாக்கு உள்ள மாநிலங்களில் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஒபாமாவின் இந்திய வருகையை மையப்படுத்திய துண்டுபிரசுரங்களை மாவோயிஸ்டுகளின் தண்டகாருண்யா சிறப்பு கமிட்டி வெளியிட்டிருப்பதால் நிச்சயம் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தலாம் என்றே உளவுத்துறை கருதுகிறது.