டோக்லாம் பீடபூமியால் அதிரும் காஷ்மீர்... பாகிஸ்தானை பயன்படுத்தி வாலாட்டும் சீனா!
டோக்லாம் பீடபூமி பிரச்சனையை பயன்படுத்தி காஷ்மீர் பிரச்சனையில் தலையிட முயற்சிக்கிறது சீனா.
ஸ்ரீநகர்: பூடானின் டோக்லாம் பீடபூமியில் நீடிக்கும் போர் பதற்றம் நாட்டின் வடக்கே ஜம்மு காஷ்மீரை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.
டோக்லாம் பீடபூமி விவகாரத்தில் இந்தியா தலையிட்டால் பாகிஸ்தான் மூலமாக காஷ்மீருக்குள் எங்கள் ராணுவம் நுழையும் என கொக்கரித்தது சீனா. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
ஏற்கனவே ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து ஊடுருவலை மேற்கொண்டு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பகிரங்கமாகவே காஷ்மீருக்குள் நுழைவோம் என சீனா அராஜகமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ராஜ்நாத்துடன் சந்திப்பு
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து மெகபூபா வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு காஷ்மீரில் சீனாவின் ஊடுருவல் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
விளக்கம் தர கோரிக்கை
இதற்கு அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தம்முடைய ஆட்சியில் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக எந்த ஒரு உளவுத்துறை தகவலும் வரவில்லை. ஆகையால் இது தொடர்பாக முதல்வர் மெகபூபா விளக்கம் தர வேண்டும் என கோரியிருந்தார்.
காலனி நாடு
சீனாவைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானை பொருளாதார நலன்களுக்காக முழு காலனி நாடாகவே வைத்திருக்கிறது. பாகிஸ்தான் நகரங்கள் வழியாக ஈரான்- ஆப்கான் எல்லையில் இருக்கக் கூடிய கவ்தார் துறைமுகத்தை ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் அடைவதற்காக கட்டமைப்புகளை முழு அளவில் சீனா மேற்கொண்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...
இதற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளையும் சீனா பயன்படுத்தி வருகிறது. இதை ஏற்கனவே இந்தியா ஆட்சேபித்திருக்கிறது.
காஷ்மீரில் தலையீடு
இந்நிலையில் பூடானின் டோக்லாம் பீடபூமி பதற்றத்தை பயன்படுத்தி காஷ்மீர் விவகாரங்களில் தலையிடும் பேச்சுகளை சீனா தொடங்கி வைத்துள்ளது. அமெரிக்கா நாட்டாமை பாத்திரம் வகிப்பது போல தன்னை காட்டிக் கொள்ள சீனா முயற்சிக்கிறது.
பாக். கைவிடுமா?
சீனாவின் இத்தகைய அத்துமீறிய போக்குகளை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அப்படியே காஷ்மீர் பிரச்சனையில் சீனா தலையிட விரும்பினால் முதலில் பயங்கரவாத செயல்களை தூண்டிவிடும் போக்கை பாகிஸ்தான் கைவிட வலியுறுத்துமா? என்பதுதான் கேள்வி.