மத்திய அமைச்சரவை இன்று மாற்றம்? 9 புது முகங்களுக்கு வாய்ப்பு !
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவாத பொருளாகியுள்ள மத்திய அமைச்சரவை மாற்றம் இன்று நிகழ உள்ளது. நேற்று மாலை குடியரசு தலைவர் மாளிகைக்கு புதிய அமைச்சர்கள் பட்டியல் அனுப்பப்பட்டு, இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றத்தில் எந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும் என்ற யூகங்கள் கொடிகட்டி பறக்கின்றன. இரு வகைகளில் கேபினெட் மாற்றம் கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
சிறப்பாக பணியாற்றாத அமைச்சர்களை மாற்றுவது ஒருபக்கம் என்றால், சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் கணிசமான இடங்களை கொடுப்பது என்பது மற்றொரு திட்டமாக உள்ளது.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அசாம் மாநில முதல்வராக பதவியேற்றுள்ளதால், அந்த பதவியிடத்திற்கு ராமன் தேகா நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
உத்தர பிரதேசத்தில் இருந்து இருவர் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம். பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங்களில் இருந்து சில புதிய முகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அம்மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தல்கள் இதற்கு காரணமாக அமையலாம்.
75 வயதுக்கு மேற்பட்டவர்களை அமைச்சரவையில் வைத்திருக்க மோடி விரும்பவில்லை. எனவே, நஜ்மா ஹெப்துல்லாவுக்கு பதிலாக முக்தர் அப்பாஸ் நக்வி அமைச்சராக்கப்படலாம்.
நிதி, பாதுகாப்பு, உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை ஆகிய அதி முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கான அமைச்சர்கள் மாற்றப்படமாட்டார்கள் என தெரிகிறது. அமைச்சரவையில், 9 புதிய முகங்கள் இடம்பெற வாய்ப்பிருப்பதாகவும், 3 இணை அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.