சுப்ரீம் கோர்ட்டின் பிரம்மாஸ்திரம் அரசியல் சாசன பிரிவு 142.. காவிரி விவகாரத்தில் ஏவப்படுமா?
டெல்லி: காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த இயலாது என கூறி, இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் கடந்த 23ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் லலித் அமர்வு முன்னிலையில், விசாரணைக்கு, வந்தபோது, இந்த தீர்மானம் குறித்து தமிழகம் சார்பில் ஆஜரான சேகர் நாப்தே, கேள்வி எழுப்பினார். கர்நாடகா மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
சேகர் நாப்தே, தனது வாதத்தில், காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடகா மீறியுள்ளது. ஆர்டிகிள் 142-ன் கீழ் கர்நாடகா மீது சுப்ரீம்கோர்ட் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை ஆரம்பம் முதலே கர்நாடகா மதிக்கவில்லை. தொடக்கம் முதலே காவிரியிலிருந்து குறைந்த அளவு தண்ணீரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டுவந்தது. பெங்களூர் காவிரி பாசன பகுதி கிடையாது. எனவே, பெங்களூருக்கு குடிநீர் வழங்க சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சரியல்ல என்றார். இருப்பினும் இந்த அதிகாரத்தை சுப்ரீம்கோர்ட் பயன்படுத்தவில்லை. தொடர்ந்து கர்நாடகா சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறினால், கோர்ட் இந்த பிரம்மாஸ்திரத்தை ஏவ வாய்ப்புள்ளது.
ஆர்டிகிள் 142 என்றால் என்ன?
அரசியல் சாசனத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகாரமே 142. எந்த ஒரு மாநில அல்லது மத்திய அரசோ சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதித்து நடக்கவில்லை, அதன் உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால், நீதிமன்றமே நேரடியாக உத்தரவை நிறைவேற்ற இந்த சட்டப் பிரிவு வகை செய்கிறது.
கடந்த வருடம் டிசம்பரில் உத்தர பிரதேச அரசுக்கு எதிராக இப்பிரிவை சுப்ரீம் கோர்ட்டின், நீதிபதி ராஜன் கோகாய் தலைமையிலான அமர்வு பயன்படுத்தியது. லோக்ஆயுக்தா நீதிபதியை நியமிக்கும் விவகாரத்தில் மாநில அரசு சுப்ரீம்கோர்ட் உத்தரவை கண்டுகொள்ளாத நிலையில், சுப்ரீம் கோர்ட்டே நேரடியாக முன்னாள் நீதிபதி விரேந்திரசிங்கை உத்தரபிரதேச லோக்ஆயுக்தாவுக்கு நீதிபதியாக நியமித்தது.
இப்பிரிவை பயன்படுத்தி கர்நாடக அணைக்கட்டுகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க தமிழகம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.