பாஜக இதைத்தான் செய்யப் போகிறது.. கட்ஜுவின் பரபர போஸ்ட்!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சீர்குலைத்து அதில் குளிர் காய பாஜக மறைமுகமாக திட்டமிட்டுள்ளதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு சமீப காலமாக பலமுனைகளில் நெருக்கடி வலுத்து வருகிறது. தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை என சகல துறைகளும் இதில் களம் இறங்கியுள்ளன. ஆனால் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலங்காமல் உள்ளார்.
இந்த நிலையில் கட்ஜு தனது முகநூலில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக, ஆம் ஆத்மியை சிதைக்கவுள்ளதாக அவர் பரபரப்பாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கட்ஜு கூறியுள்ளதாவது:
ராஜ்யசபாவுக்குள் நுழையலாம்
ஆம் ஆத்மிக்கு தற்போது டெல்லி சட்டசபையில் மொத்தம் உள்ள 70 எம்.எல்.ஏக்களில், 67 பேர் உள்ளனர். அதாவது அவர்களால் 2018ம் ஆண்டு நடக்கும் ராஜ்யசபா தேர்தலின்போது 3 எம்.பிக்களை தேர்வு செய்து அனுப்ப முடியும். ஆனால் பாஜக இதை அனுமதிக்குமா?
பாஜக தடுக்கும்
நிச்சயம் பாஜக அனுமதிக்காது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மோடி தலையில் சுத்தியலால் அடித்துக் கொண்டிருக்கிறார் கெஜ்ரிவால். இந்த நிலையில் அவரது கட்சி சார்பில் ராஜ்யசபாவுக்கு செல்வோரும் அதையேதானே செய்வார்கள். இதை பாஜக அனுமதிக்குமா.. நிச்சயம் அனுமதிக்காது. அப்படியானால் என்ன நடக்கும்?.
இதுதான் நடக்கும்
இதுதான் எனது கணிப்பாகும். மொத்தம் உள்ள 67 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களில், 27 பேருக்கு தேர்தல் ஆணையம் ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இவர்கள் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். விரைவில் இந்தத் தீர்ப்பு வெளியாகும்.
1980ல் நடந்தது போல
அதன் பின்னரோ அல்லது அதற்கு முன்பாகவோ 1980ம் ஆண்டு நடந்தது போன்ற சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. அப்போது மத்தியில் ஜனதாக் கட்சி ஆட்சி இருந்தது. ஹரியானாவிலும் பஜன்லால் முதல்வராக இருந்தார்.
பஜன்லால் போல
80ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனால் தனது ஆட்சி டிஸ்மிஸ் ஆகலாம் என பயந்தார் பஜன்லால். இதையடுத்து அப்படியே தனது கட்சியோடு மொத்தமாக காங்கிரஸுக்குத் தாவினார். தொடர்ந்து முதல்வராக நீடித்தார். பதவியைக் காப்பாற்றிக் கொண்டார்.
ஆம் ஆத்மியை பாஜக வளைக்கலாம்
அதேபோல இப்போதும் நடக்கலாம். அதாவது பெரும்பாலான ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள், பாஜகவுக்குத் தாவி தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முனையலாம். கெஜ்ரிவாலை இவர்கள் ஒதுக்கி விடலாம்.
சிசோடியாவும் காவிக்கு மாறலாம்
அதற்குப் பதில் மனீஷ் சிசோடியா போன்ற சிலர் பாஜகவுக்கு ஏற்புடையவர்களாக உள்ளனர். அவரைப் போல 3 பேர் உள்ளனர். அதில் யாரேனும் ஒருவரை பாஜக முதல்வராக்கலாம். சிசோடியாவும் யோகி ஆதித்யநாத் போல காவி உடை தரித்து ஹர ஹர மோடி என்று முழங்கியபடி பதவியில் தொடரலாம் என்று கட்ஜு கூறியுள்ளார்.