ஜெ. வழக்கில் மே 12-க்குள் தீர்ப்பா அல்லது மறு விசாரணையா? 3 நீதிபதிகள் பெஞ்ச் கையில் 'க்ளைமாக்ஸ்'!!
டெல்லி: ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமனம் செல்லும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பை 3 நீதிபதிகள் பெஞ்ச் ஏற்றுக் கொண்டால் மே 12-ந் தேதிக்கு முன்னதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க மே 12-ந் தேதி வரை கால அவகாசத்தையும் உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.
அதாவது ஜெயலலிதா கோரியபடி ஜாமீனும் நீட்டிக்கப்பட்டுவிட்டது. கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கோரியபடி தீர்ப்பு வழங்குவதற்கான கால அவகாசமும் கொடுக்கப்பட்டுவிட்டது.
- தற்போதைய நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு மட்டுமே வர வேண்டியுள்ளது.
- பவானிசிங் ஆஜரானதை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் லோகூர் மற்றும் நீதிபதி பானுமதி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்ததால் 3 பேர் கொண்ட இந்த பெரிய பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
- இந்த 3 நீதிபதிகள் பெஞ்ச் வரும் 21-ந் தேதியன்று விசாரணையை நடத்த உள்ளது.
- இன்னமும் இந்த 3 நீதிபதிகள் பெஞ்ச் நியமிக்கப்படவில்லை.
- அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானதில் தவறில்லை என்ற நீதிபதி பானுமதி கருத்தை 3 நீதிபதிகள் பெஞ்ச் ஏற்றுக் கொண்டால் மே 12-ந் தேதிக்கு முன்னரே நீதிபதி குமாரசாமி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை அளிக்கலாம்..
- அதே நேரத்தில் பவானிசிங் ஆஜரானதே சட்டவிரோதம்; மேல்முறையீட்டு விசாரணையே முறையாக நடக்கவில்லை என்ற நீதிபதி லோகூரின் கருத்தை 3 நீதிபதிகள் ஏற்றுக் கொண்டால் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முழுவதுமாக மீண்டும் நடத்தப்பட வேண்டும். அப்படியெனில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க மேலும் 3 அல்லது 4 மாதம் காலமாகும்..
- ஜெயலலிதா வழக்கின் அடுத்த கட்டம் இனி 3 நீதிபதிகள் பெஞ்ச் கையில் மட்டும்தான் இருக்கிறது....