இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு அமீரகத்தில் தடை: அதனால் இந்தியாவுக்கு என்ன நன்மை?
டெல்லி: இந்தியன் முஜாஹிதீன், லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட 86 தீவிரவாத அமைப்புகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடைவித்துள்ளது இந்தியாவுக்கு மறைமுகமாக நல்லதாக அமைந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் இந்தியன் முஜாஹிதீன், லக்ஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட 86 தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளது. இதில் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் இ தொய்பா ஆகிய அமைப்புகள் இந்தியாவை தாக்க குறி வைப்பதால் இந்தியாவுக்கு தலைவலியாக இருந்து வருகின்றன. இந்த 2 அமைப்புகளுக்கும் அமெரிக்காவும் தடை விதித்துள்ள போதிலும் அமீரகம் விதித்துள்ள தடை இந்தியாவுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
காரணம் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் இரண்டாவது இல்லமாக அமீரகம் செயல்பட்டு வருகிறது. வாரணாசி குண்டுவெடிப்புகளுக்கு பிறகு யாசின் பட்கலுடன் கைதான அசாதுல்லா அக்தர் அமீரகத்தில் தான் தஞ்சம் அடைந்தார். இந்தியாவில் அவரை தேடுகையில் அவரோ அமீரகத்தில் இருந்து கொண்டே அமைப்பை நடத்தினார்.
தற்போது அமீரகம் விதித்துள்ள தடையால் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும் என்று இந்திய ஏஜென்சீக்கள் தெரிவித்துள்ளன. இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு அமீரகத்தில் இருந்து தான் அதிக அளவில் பணம் வந்துள்ளது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த யாசின் பட்கல் உள்பட பலர் இந்தியாவில் இருந்து அமீரகம் சென்று அங்கு தான் அமைப்பில் சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு அமீரகத்திற்கு சென்று அமைப்பில் சேர்ந்தவர்கள் பலர். அமீரக அரசின் தடையால் இந்தியன் முஜாஹிதீன் அங்கு வளர்ச்சி அடைய முடியாது. இந்த தடை விதித்ததற்கு முன்பு இந்தியா அமீரகத்திற்கு தகவல் அனுப்பி அங்குள்ள தீவிரவாதிகளை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கேட்டிக் கொண்டிருந்தது.
அமீரகத்தில் தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு எழுச்சி பெற்றது. 2010ம் ஆண்டு இந்தியன் முஜாஹிதீன் ஆட்கள் சிக்கியதும் அந்த அமைப்பு சிலகாலம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்தது. ஆனால் அவர்கள் அமீரகத்தில் குழுக்கள் அமைத்து செயல்படத் துவங்கினர்.
அமீரகத்தில் உள்ள இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் தான் வாரணாசியில் தாக்குதல் நடத்தினார்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. வாரணாசி தாக்குதலுக்கு டாக்டர் ஷாநவாஸ் மற்றும் அசாதுல்லா அக்தர் ஆகியோர் தான் முக்கிய மூளையாக இருந்தனர் என உளவுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருமே ஷார்ஜாவுக்கு சென்று அங்கிருந்து தாக்குதலை நடத்த ஆட்களை பணித்தனர்.
அப்பொழுது தான் அமீரகத்தில் செயல்படும் இந்தியன் முஜாஹிதீன் ஆட்கள் இந்தியாவுக்கு தலைவலியாக இருப்பதை உளவுத்துறை கண்டுபிடித்தது. தீவிரவாதிகள் அமீரகத்தில் தஞ்சம் அடைந்ததோடு மட்டும் அல்லாமல் அமைப்புக்கு எளிதில் நிதி திரட்டியுள்ளனர்.
தற்போது அமீரகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு கடினமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.