அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லுமா? இன்றே முடிவை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்?
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது.
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்க உள்ளதால் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அதிமுகவின் சட்ட திட்டங்களின் படி இந்த தேர்வு நடைபெறவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவோடு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.
இதன்பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிமுக சட்டவிதிகளின் படி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் அந்த நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் அணியினர் நாடினர்.
இந்த புகார் மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்ததன் பேரில் சசிகலா பதலளித்தார். அதேபோல் 61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை ஓபிஎஸ் தரப்பினரும் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இரு தரப்பிடமும் இன்று நேரில் விசாரணை நடத்த உள்ளது. அப்போது சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பு வெளியானால், அவரால் நியமிக்கப்பட்ட பதவியிடங்கள் காலியாகும். அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதவியும் பறிபோகும். மேலும், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை என்ற நிலையே தொடரும்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது.