தூக்கிலிடும் முன்பு நமாஸ் செய்து குர்ஆன் ஓதிய யாகூப் மேமன்
நாக்பூர்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் தூக்கிலிடப்படும் முன்பு தொழுதுவிட்டு குர்ஆன் ஓதியுள்ளார்.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து அவர் செய்த முறையீடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நாக்பூரில் உள்ள மத்திய சிறையில் இன்று காலை தூக்கிலிடப்பட்டார்.
பீகாரில் உள்ள பக்சார் மத்திய சிறையில் இருந்து வரவழைக்கப்பட்ட கயிறில் அவர் தூக்கிலிடப்பட்டார். பிறந்தநாளான இன்று அவருக்கு இறந்த நாளாக ஆகியுள்ளது. முன்னதாக அவர் இன்று அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து சுடு தண்ணீரில் குளித்துள்ளார்.
சிறை அதிகாரிகள் அளித்த ஆடையை உடுத்தி அவர் தொழுதுள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் குர்ஆன் ஓதியுள்ளார். பின்னர் அவருக்கு பிடித்த உணவு வழங்கப்பட்டது. மேமனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு நாக்பூர் வந்த அவரது குடும்பத்தாரிடம் அளிக்கப்பட்டது.
அவரது உடல் மும்பை மாஹிம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி மாஹிம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.