எச்சூரி பற்ற வைத்த சிகரெட்டை கீழே போட வைத்த கார் டிரைவர்!
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்திற்கு விஜயம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான சீதாராம் எச்சூரி ஒரு கிராமத்திற்குப் போனபோது ஸ்டைலாக சிகரெட்டைப் பற்ற வைத்து பிடிக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்த அந்த ஊர் பஞ்சாயத்துத் துணைத் தலைவரான கார் டிரைவர், இங்கு புகை பிடிக்க தடை உள்ளது, கீழே போடுங்க என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனாலும் எச்சூரி ஊர்க் கட்டுப்பாட்டை மதித்து சிகரெட்டை கீழே போட்டு விட்டார்.
பொது இடங்களி்ல் புகை பிடிக்கத் தடை உள்ளது. ஆனாலும் பலர் புஸ் புஸ் என்று ஊதித் தள்ளத்தான் செய்கிறார்கள். சாதாரண ஜனங்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் கூட வளையம் விடுவதை தவிர்ப்பதில்லை. முன்பு ஷாருக் கான் பல முறை இதுபோல நடந்து அபராதமும் விதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சீதாராம் எச்சூரிக்கு ஒரு தர்மசங்கடமான புகை அனுபவம் ஆந்திராவில் வைத்துக் கிடைத்தது. ஹைதராபாத் வந்திருந்த எச்சூரி, அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு தனது கட்சியினருடன் சென்றிருந்தார். பிரகதி காலனி என்ற அந்த கிராமத்திற்கு அவர் சென்றபோது ஊர் மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துள்ளார்.
இதைப் பார்த்த வெங்கடேஷ் என்ற கார் டிரைவர் இங்கு புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, கீழே போடுங்க என்று எச்சூரியைப் பார்த்துக் கூறினார். இதைக் கேட்டு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இருந்தாலும் எச்சூரி புன்னகையுடன் சிகரெட்டை கீழே போட்டு அணைத்து விட்டார்.
அந்த கிராமத்தில் புகை பிடிக்க மட்டுமல்லாமல் குத்கா சாப்பிடுவது, பான் பராக் மெல்லுவது, மதுக் கடைகள் என சகல போதை வஸ்துக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். மீறி யாராவது அதைச் செய்தால் ஊரை விட்டே வெளியேற்றி விடுவார்களாம். அந்த கட்டுப்பாடு தெரியாமல்தான் எச்சூரி தம் அடிக்க ஆரம்பித்தார். ஆனால் வெங்கடேஷ் உள்ளே புகுந்து சிகரெட்டை கீழே போட வைத்து விட்டார்.
இந்த வெங்கடேஷ் அந்த கிராமத்தின் பஞ்சாயத்துத் துணைத் தலைவரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.