குடிபோதையில் பாரில் ஷீனா கொலை விவரங்களை உளறிய டிரைவர்: ஒட்டுக் கேட்ட இன்பார்மர்
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் 3 ஆண்டுகள் கழித்து இந்திராணி தற்போது சிக்கியதற்கு அவரது முன்னாள் டிரைவர் ராய் தான் காரணம்.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி மும்பையில் வைத்து தனது மகள் ஷீனா போராவை கொலை செய்தார். இந்த வழக்கில் இந்திராணி கடந்த செவ்வாய்க்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் தற்போது சிக்கியதன் விவரம் தெரிய வந்துள்ளது.
டிரைவர்
இந்திராணியின் முன்னாள் டிரைவர் ஷ்யாம் ராய் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பார் ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.
குடிபோதை
குடிபோதையில் ராய் தனது நண்பர்களிடம் இந்திராணி தனது மகள் ஷீனாவை எப்படி கொலை செய்து அவரது உடலை எரித்தார் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உளறியுள்ளார்.
போலீஸ்
ராய் மற்றும் அவரது நண்பர்கள் இருந்த டேபிளுக்கு பின்னால் உள்ள டேபிளில் போலீசாருக்கு துப்புக் கொடுக்கும் நபர் இருந்துள்ளார். அவர் ராய் கூறிய அனைத்தையும் கேட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பின்தொடர்தல்
பார் சம்பவத்தை அடுத்து மும்பை போலீசார் ராயை அவருக்கு தெரியாமல் பின் தொடர்ந்து பல தகவல்களை சேகரித்தனர். அப்போது இந்திராணி ஸ்பெயினில் இருந்ததால் ராயை அவர்கள் கைது செய்யவில்லை. ராயை கைது செய்தால் இந்திராணி உஷாராகி நாடு திரும்பமாட்டார் என்று போலீசார் நினைத்தனர்.
கைது
இந்திராணி நாடு திரும்பிய பிறகு அவரையும், டிரைவர் ராயையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கொலை குறித்த அனைத்து விவரங்களையும் ராய் தெரிவித்துவிட்டார்.