1999... காந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானத்தை துபாய் வரை துரத்திச் சென்ற என்.எஸ்.ஜி
டெல்லி: 1999ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட சமயத்தில், என்எஸ்ஜி கமாண்டோக்கள் அந்த விமானத்தை இன்னொரு விமானத்தில் துபாய் வரை விரட்டிச் சென்றனர். மேலும் துபாய் விமான நிலையில் தரையிறங்கி அதிரடியாக விமானத்தில் புகுந்து தாக்குதல் நடத்த ஆயத்தமான நிலையில் அதற்கு துபாய் அரசிடம் இருந்து அனுமதி கிடைக்காமல் போனதால் அந்த முயற்சி பலிக்காமல் போய் விட்டது.
1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நேபாளத்தில் இருந்து டெல்லிக்குக் கிளம்பிய ஏர்இந்தியா விமானம் ( IC 814) பாகிஸ்தானின் ஹர்கத் உல் முஜாகிதீன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் எரிபொருளை நிரப்ப தீவிரவாதிகள் கோர, எரிபொருளுடன் கூடிய டிரக் பக்கத்தில் வந்தது. ஆனால், அந்த டிரக்கை பஞ்சாப் போலீசார் ரன் வேயில் பாதியில் நிறுத்திவிட்டனர். எரிபொருள் நிரப்புவதை தாமதப்படுத்த முயன்றனர். ஆனால், இதனால் சந்தேகம் கொண்ட தீவிரவாதிகள் விமானத்தை உடனடியாக மேலும் டேக் ஆப் செய்ய வைத்தனர்.
இதையடுத்து அதை லாகூருக்குக் கொண்டு சென்றனர். அங்கு எரிபொருளை நிரப்பிவிட்டு, அங்கிருந்து விமானத்தை துபாய்க்கு கொண்டு சென்றனர் தீவிரவாதிகள்.
அங்கிருந்து இறுதியாக ஆப்கானிஸ்தானின் காண்டஹார் நகரில் தரையிறக்கினர். தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்த நிலையில், முன்னதாக விமானம் அமிர்தசரஸை விட்டு வெளியேறியதை ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்விகள் எழுந்தன.
மத்திய அரசின் தவறான முடிவு மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் முடிவெடுப்பதில் எடுத்துக் கொண்ட தாமதமும், குளறுபடி காரணமாகவே விமானம் இந்தியாவை விட்டு வெளியேறியது.
7 நாள் கடத்தல்.. 3 தீவிரவாதிகள் விடுதலை
7 நாள் நீடித்த இந்த விமானக் கடத்தல், முஷ்டாக் அகமது சர்கார், அகமது ஓமர் சயீத் ஷேக், மெளலானா மசூத் அஸார் ஆகிய 3 மூக்கிய தீவிரவாதிகளை இந்தியா விடுவித்த பின்னர் முடிவுக்கு வந்தது. பல முக்கிய தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய அதி பயங்கர நபர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைக்குப் பின்னர் இவர்கள் பல முக்கிய சம்பவங்களில் ஈடுபட்டனர். அதில் முக்கியமானது, பாகிஸ்தானில் டேணியல் பேர்ல் என்ற அமெரிக்கர் படுகொலை செய்யப்பட்டது. அதேபோல மும்பைத் தீவிரவாதத் தாக்குதல், 9/11 தாக்குதல் ஆகியவற்றிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தாக்குதலுக்குத் தயாரான என்.எஸ்ஜி கமாண்டோக்கள்
இந்த நிலையில் காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக சில முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதாவது விமானம் லாகூரில் இருந்து இருந்து டேக் ஆப் ஆனது முதல் துபாயில் அது தரையிறக்கப்பட்டது வரை அந்த விமானத்தை மத்திய என்எஸ்ஜி கமாண்டோப் படையினர் பின் தொடர்ந்து சென்றனர். துபாயில் வைத்து விமானத்திற்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி பயணிகளை மீட்கவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் துபாயில் தரையிறங்கவே என்எஸ்ஜி கமாண்டோக்களின் விமானத்துக்கு அந்த நாட்டு அரசு அனுமதி தரவில்லை. இதையடுத்து கமாண்டோக்களின் விமானம் இந்தியா திரும்பிவிட்டது தெரியவந்துள்ளது.
முன்னாள் ரா தலைவர் துலாத்
முன்னாள் ரா உளவு அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.துலாத் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். இவர் அப்போது பிரதமர் வாஜ்பாயின் ஆலோசகராக இருந்து வந்தார். என்எஸ்ஜி படைகளுக்கும் இவர் நிர்வாகியாக இருந்தார். வாஜ்பாய் அரசு கமாண்டோப் படை மூலம் தாக்குதல் நடத்தி விமானத்தையும், பயணிகளையும் மீட்கத் திட்டமிட்டிருந்ததாக துலாக் கூறுகிறார். இதுதொடர்பாக அவர் புத்தகம் ஒன்றில் விவரித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
துரத்திச் சென்ற கமாண்டோக்கள்
55 பேர் அடங்கிய நமது கமாண்டோப் படையினர் தனி விமானம் மூலம் கடத்தப்பட்ட விமானத்தை பின் தொடர்ந்து சென்றனர். துபாயில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இறங்கி அதிரடியாக உள்ளே புகுந்து தாக்குதல் நடத்த நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் எங்களுக்கு துபாய் நிர்வாகம் அனுமதி தரவில்லை.
கைவிட்ட அமெரிக்கா
அமெரிக்க அரசிடம் நிலைமையை எடுத்துக் கூறி அவர்களது ஆதரவையும் பெற முயன்றோம். அமெரிக்கா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு நெருக்கடி தந்து கமாண்டோக்களை தரையிறக்க வைக்க முயன்றோம். ஆனால், சர்வதேச அளவில் அப்போது இந்தியா தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் பேசி நமக்கு சாதகமாக அனுமதி பெற்றுத் தர அமெரிக்கா முன்வரவில்லை.
தயாராக இருந்த கமாண்டோக்கள்
விமானக் கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக சிறப்புப் பயிற்சி பெற்ற என்எஸ்ஜியின் 52வது சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த கமாண்டோக்கள் அதிரடித் தாக்குதலுக்காக தயாராக இருந்தனர்.
அதிகாரிகளின் குளறுபடி
மறுபக்கம் விமானக் கடத்தல் தொடர்பாக ஆலோசிக்க அமைக்கப்பட்ட நெருக்கடி கால அவசரக் குழுவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் நேரத்தை வீணடித்தனர். மேலும் கடத்தல்காரர்கள் விமானத்துடன் கிளம்பிச் செல்லவும் அவகாசம் கொடுத்து விட்டனர். அமிர்தசரஸில் விமானம் இறங்கியபோதே அதை முடக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட இந்த அதிகாரிகளின் தேவையற்ற தாமதம் மற்றும் குளறுபடியான முடிவுகளே காரணம். இந்திய எல்லையை விட்டு விமானம் கிளம்பிச் சென்று விட்டதால் நமது கட்டுப்பாடு முழுமையாக கையை விட்டுப் போய் விட்டது. இதன் காரணமாக தீவிரவாதிகள் கோரிய மிகமுக்கியமான 3 தீவிரவாதிகளை நாம் விடுவிக்க நேரிட்டது.
தாமதமாக வந்த தகவல்
இன்னொரு முக்கியமான விஷயம், கடத்தல் தொடர்பான தகவல் கமாண்டோ படையினருக்கு மிகத் தாமதமாகவே தெரிவிக்கப்பட்டது. அதில் நிறைய நேரத்தை அதிகாரிகள் வீணடித்து விட்டனர். அமிர்தசரஸில் விமானம் நின்றிருந்தபோது கூட எங்களுக்குத் தகவல் தெரியாது. மாறாக, விமானம் கிளம்பிச் சென்ற பிறகே எங்களுக்குத் தகவல் வந்து சேர்ந்தது. இதனால் விமானத்தைத் துரத்திச் செல்லும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.
ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு
விமானம் கிளம்பிச் சென்ற பிறகு அதிகாரிகள் குழு கூடி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் வேலையில் இறங்கியது. இது இன்னொரு கொடுமை. விமானம் அமிர்தசரஸை விட்டுக் கிளம்பிச் செல்ல அனுமதித்த தவறுக்கு யார் காரணம் என்று ஆளாளுக்கு குற்றம் சாட்டி வந்தனர். என்எஸ்ஜி தலைவர் நிகில் குமாரையும், அமைச்சரவை செயலாளரையும் குற்றம் சாட்டி வாதங்கள் மூண்டன என்று கூறியுள்ளார் துலாத்.
அரசின் நிலைப்பாடு
இருப்பினும் அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும், எதிர்க்கட்சி்த் தலைவர்களை கேட்ட பிறகே அரசு முடிவெடுத்தது என்று அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்தது என்ன?
1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ஐசி 814 விமானமானது, நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குக் கிளம்பி வந்தபோது கடத்தப்பட்டது. 5 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் விமானத்தைக் கடத்தியது. லாகூருக்கு விமானத்தைத் திருப்ப கடத்தல்காரர்கள் உத்தரவிட்டனர். ஆனால் எரிபொருள் போதாது என்பதால் விமானம் அமிர்தசரஸில் தரையிறக்கப்பட்டது. அப்போது விமானத்தை முடக்க நடந்த முயற்சிகளைக் கண்டுபிடித்து விட்ட தீவிரவாதிகள் ஒரு பயணியை சுட்டுக் கொன்றனர். பின்னர் விமானத்தை மேலே கிளப்ப உத்தரவிட்டனர். விமானம் கிளம்பிச் சென்றது.
லாகூரில் தரையிறக்கம்
இந்த நிலையில் விமானத்தில் எரிபொருள் தீரத் தொடங்கியதால் லாகூரில் விமானத்தை தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அனுமதி மறுத்து விட்டது. மேலும் விமான நிலைய விளக்குகளையும் அது ஆப் செய்து விட்டது. இருப்பினும் வேறு வழியில்லாமல் விமானி தேவி சரண் விமானத்தை தரையிறக்க முயன்றார். ஆனால் அவர் தரையிறங்க முயற்சித்த இடம் சாலை என்பதால் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் லாகூர் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் விமானம் அங்கு தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின்னர் விமானம் லாகூரை விட்டுக் கிளம்பியது.
துபாய்
அதன் பின்னர் விமானம் துபாய்க்குப் பறந்தது. அங்கு 27 பயணிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும், கடத்தல்காரர்களால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த ருபன் கத்யால் என்பவரையும் விடுவித்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அங்கு வைத்துத்தான் இந்தியப் படையினர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காமல் போய் விட்டது.
காந்தஹாருக்கு
அடுத்து விமானம் காந்தஹாருக்குத் திருப்பப்பட்டது. அங்கு வைத்து தலிபான் தீவிரவாதிகள் மூலம் மத்திய அரசு பேச்சு நடத்தியது. சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது போல நடித்தனர் தலிபான் தீவிரவாதிகள். இதன் விளைவாக 3 முக்கியத் தீவரவாதிகளை இந்தியா விடுதலை செய்ய நேரிட்டது. அதன் பின்னரே விமானம் விடுவிக்கப்பட்டது.
இந்த 3 தீவிரவாதிகளையும் அப்போதைய மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கே ஒரு விமானத்தில் அழைத்துச் சென்று விடுவித்துவிட்டு பயணிகள் விமானத்தையும் பயணிகளையும் மீட்டுக் கொண்டு வந்தார். ஜஸ்வந்த் சிங் அந்த விமானத்தில் இருந்தது தலிபான்களுக்கு கடைசி வரை தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ஜஸ்வந்த் சிங்கே அந்த விமானத்தில் சென்று தனது கடமையை செய்தார். அந்த வகையில் ஜஸ்வந்த் என்றும் போற்றுதலுக்குரிய ஒரு தலைவர் ஆவார். இவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.