"சதிகாரர்கள் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ்": அரவிந்த் கேஜ்ரிவால் கடும் சாடல்!!
டெல்லி: தம்மையும் ஆம் ஆத்மி கட்சியையும் பலவீனப்படுத்த முயற்சிக்கப்பட்டதாக அதன் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆம் ஆத்மியின் தேசிய குழுக் கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசிய வீடியோ பதிவு ஆம் ஆத்மி கட்சியால் நேற்று வெளியிடப்பட்டது. அதில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியிருப்பதாவது:
ஒட்டுமொத்த டெல்லியும் எங்களுக்கு ஆதரவாக நிற்கும்போது, நண்பர்கள் சிலர் நமக்கு எதிராக நிற்கின்றனர். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியைச் சந்திப்பதற்காக சதி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்தால் மட்டுமே, நானும், கட்சியும் பாடம் கற்போம் என்று பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார். அதுதவிர, செய்தி ஊடகங்களில் எனக்கு எதிராக கட்டுக்கதைகள் பரப்பப்பட்டன. அவற்றை யோகேந்திர யாதவே மேற்கொண்டதாக 2 செய்தித் தொலைக்காட்சிகளின் மூத்த ஆசிரியர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
கட்சியின் கொள்கைகளைப் மீட்டெடுப்பதாகக் கூறி, சொந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து விலகுவதாக அவர்கள் கூறினர். வேண்டுமானால் கட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், அதைக் கொன்றுவிடாதீர்கள்.
இனி நான் வேண்டுமா அல்லது யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் பேசியிருந்தார்.