இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அதிக ஆதரவாளர்கள் இருப்பது எங்கு தெரியுமா?
டெல்லி: இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், அதிலும் குறிப்பாக தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர்கள்தான் அதிகப்படியாக ஐஎஸ்ஐஎஸ் மீது ஈர்ப்பு கொண்டுள்ளதாக உளவுத்துறை கூறுகிறது.
நாடு முழுவதிலும் ஐஎஸ்ஐஎஸ் அனுதாபிகளை உளவுத்துறை கண்காணித்து வருகிறது. சுமார் 200 பேர் இவ்வாறான அனுதாபிகள் என தகவல் கிடைத்துள்ளது.
அதில் தெலுங்கானாவை சேர்ந்த 65 பேரும், கர்நாடகாவை சேர்ந்த 50 பேரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 3வது இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. இங்கு சுமார் 48 அனுதாபிகளும், கேரளாவில் 45 அனுதாபிகளும் உள்ளனர்.
தெலுங்கானாவில், தலைநகர் ஹைதராபாத்தில்தான் அனுதாபிகள் அதிகம் என்கிறது அந்த விவரம்.
இணையதளத்தில் பெரும்பாலும் தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை தேடுவதன் அடிப்படையில் இந்த தகவல் திரட்டப்பட்டுள்ளது. அதேநேரம், இணையதளத்தில் தேடுபவர்களையெல்லாம், தீவிரவாத நோக்கம் கொண்டவர்கள் என முத்திரை குத்த முடியாது என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பொறுத்திருந்து அவர்கள் நடவடிக்கையை கண்காணிப்பது என உளவுத்துறை முடிவு செய்துள்ளதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சவுதி அல்லது சிங்கப்பூர் சென்று அங்கிருந்து இந்த இந்திய அனுதாபிகள் சிரியாவுக்குள் நுழைவது வழமையாக உள்ளதால், அவர்களை கட்டுப்படுத்துவது உளவுத்துறைக்கு சவாலாக உள்ளது.
சமீபகாலமாக சூடான் வழியாகவும், சிரியாவுக்குள் நுழைவது அதிகரித்துள்ளது, தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர், ஓமனில் பணியாற்றி வந்த நிலையில், சூடான் வழியாக, சிரியாவுக்குள் நுழைந்து தீவிரவாதிகளுடன் இணைய முயன்றபோது கைது செய்யப்பட்டார்.