தாவூத், ஹபீஸ் உட்பட தேடப்படும் 10 தீவிரவாதிகளை பாக். ஒப்படைக்க இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது!
டெல்லி: தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சயீத் உட்பட இந்தியாவால் தேடப்படும் 10 தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்தியாவுக்கு வருகை தரும் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸிடம் இந்தியா இதனை வலியுறுத்த உள்ளது.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் வரும் ஞாயிறன்று டெல்லி வருகை தருகிறார். அவருடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இப்பேச்சுவார்த்தையின் போது இந்தியாவால் தேடப்படுகிற 10 தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட உள்ளது. இந்தியா தேடும் 10 தீவிரவாதிகளின் விவரங்கள்:
ஹபீஸ் சயீத்
மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன். லஷ்கர் இ தொய்பாவின் தலைவர். மும்பை தாக்குலைத் தொடர்ந்து இந்தியா தீவிரமாக தேடி வருகிறது.
லக்வி
மும்பை தாக்குதலை செயல்படுத்தியவர் ஜஹி உர் ரெஹ்மான் லக்வி. இவனை அண்மையில் பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.
சஜித் மஜீத்
மும்பை தாக்குதல் தொடர்பாக டேவிட் ஹெட்லியிடம் விசாரணை நடத்திய போது சஜித் மஜீத் பற்றிய விவரங்கள் அம்பலமானது. இவனும் மும்பை தாக்குதலில் தொடர்புடையவன். இவனுக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சையத் ஹஸிம்
பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ வீரரான சையத் ஹஸிம் அப்துர் ரெஹ்மான், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை வழிநடத்தியவன். ஆனால் இவனுக்கும் மும்பை தாக்குதலுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
மேஜர் இக்பால்
மும்பை தாக்குதலின் போது டேவிட் ஹெட்லிக்கு உத்தரவுகளை பிறப்பித்தவன். இவனும் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ வீரர். அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பால் குற்றம்சாட்டப்பட்டவன்.
மேஜர் சமீர் அலி
மும்பை தாக்குதலின் போது மேஜர் இக்பாலுக்கு உத்தரவுகளை பிறப்பித்தவன். டேவிட் ஹெட்லியுடன் தொடர்பில் இருந்தவன்.
தாவூத் இப்ராஹிம்
மும்பையில் 1993ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நிகழ்த்திய வழக்கின் முதல் குற்றவாளி.
டைகர் மேமன்
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவன். தொடக்கத்தில் துபையில் செட்டிலாகி இருந்த இவன் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி உள்ளான். இவனது சகோதரர் யாகூப் மேமன் அண்மையில் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
ரியாஸ் பட்கல்
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரான ரியாஸ் பட்கல் தற்போது கராச்சியில் தலைமறைவாக இருக்கிறார். இந்தியாவின் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியவன்.
இக்பால் பட்கல்
ரியாஸ் பட்கலின் சகோதரரான இக்பால் பட்கலும் இந்தியன் முஜாஹீன் நிறுவனர்களில் ஒருவர். 2008ஆம் ஆண்டு முதல் கராச்சியில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.