ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் பின்னணி இதுதான்!
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீரா குமார் போட்டியிடுகிறார்கள்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், மீராகுமார் வாழ்க்கை குறிப்பு இதோ:
தலித் மக்களின் தலைவராக இன்றைக்கும் கொண்டாடப்படும் பாபு ஜெகஜீவன் ராமின் மகள், மீரா குமார் என்பது இவரின் முதல் அடையாளம்.
1945ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி பிறந்தவர் மீரா குமார். தற்போது 72 வயதாகிறது.
எம்ஏ பட்டதாரியான இவர், சட்டப் படிப்பும் பயின்றுள்ளார். கடந்த 1970ம் ஆண்டில், இந்திய குடிமைப் பணிகள் தேர்வை எழுதி, வெளியுறவுத் துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.
பல்வேறு நாடுகளில், வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார் மீரா குமார்.
1985ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான மீரா குமார், லோக்சபா உறுப்பினராக வெற்றிபெற்றார். தொடர்ச்சியாக, 3 முறை லோக்சபா உறுப்பினர் பதவி வகித்த அவர், 1999ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தார்.
எனினும், 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்ற மீரா குமார், சமூக நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற மீரா குமாரை, லோக்சபா சபாநாயகராக காங்கிரஸ் கட்சி நியமித்தது.
லோக்சபா சபாநாயகர் பதவியை வகித்த முதல் பெண் என்ற சாதனையையும் படைத்தார் மீரா குமார்.
ஆளுங்கட்சியான பாஜக கூட்டணி, தலித் தலைவரான ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும்அதற்குப் பதிலடியாக தலித் பின்னணி கொண்ட மீரா குமாரை போட்டிக்கு இறக்கியுள்ளது.