குஷ்புவுக்கு கோவில் கட்டியது தெரியும், ராதே மாவுக்கு கட்டியது தெரியுமா?
மும்பை: மும்பையில் ராணி போன்று சொகுசு வாழ்க்கை வாழும் சாமியார் ராதே மா ஒரு காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் துணி தைத்துக் கொடுத்து சம்பாதித்தவர் என்பது பலருக்கு தெரியாது.
இன்றைய தேதிக்கு பலரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பது சர்ச்சை சாமியார் ராதே மாவை பற்றி தான். வரதட்சணை கொடுமை வழக்கில் சிக்கிய அவரை மக்கள் சமூக வலைதளங்களில் ஏகத்திற்கு கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.
யார் இந்த ராதே மா, இதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரிய வேண்டுமா?
சுக்விந்தர் கவுர்
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுக்விந்தர் கவுர் தான் ராதே மா. 17 வயதில் அவருக்கும் முகேரியான் கிராமத்தைச் சேர்ந்த மோகன் சிங்கிற்கும் திருமணம் நடைபெற்றது.
டெய்லர்
முகேரியான் கிராமத்தில் உள்ள சுக்விந்தர் கவுரின் சகோதரர் நடத்தி வந்த ஸ்வீட் கடையில் மோகன் சிங் வேலை செய்து வந்தார். கணவரின் வருமானம் போதாததால் சுக்விந்தர் தையல் வேலை பார்த்து வந்தார்.
வெளிநாடு
மோகன் சிங் வேலைக்காக மத்திய கிழக்கு நாட்டுக்கு கிளம்பிச் சென்றார். அதன் பிறகு தான் சுக்விந்தர் கவுர் ராதே மா ஆகி ஆன்மீகம் பக்கம் திரும்பினார். அவர் தன்னை கடவுளாக நினைப்பதாக பஞ்சாபைச் சேர்ந்த சில மத அமைப்புகள் புகார் தெரிவித்தன.
மும்பை
பஞ்சாபில் எதிர்ப்பு கிளம்பிய பிறகு அங்கிருந்து டெல்லிக்கு சென்று ஆன்மீக வேலை செய்து வந்தார் ராதே மா. பின்னர் டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்தார். மும்பையில் அவர் ராதே மா பவனில் சொகுசாக வசித்து வருகிறார்.
கோவில்
பஞ்சாப் மாநிலம் முகேரியானில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கான்பூர் கிராமத்தில் ராதே மாவுக்கு கோவில் உள்ளது. மேலும் அங்கு அவர் பெயரில் ஒரு ஆசிரமமும் உள்ளது.