சசிகலாவை தம்பித்துரையும், தினகரனும் சந்தித்த பின்னணி இதுதானாம்!
ஜனாதிபதி தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை சசிகலாவை சிறையில் சந்தித்து பேசியதன் பின்னணி வெளியாகியுள்ளது.
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை குடும்பத்தோடு சந்தித்து பேசினார் டிடிவி தினகரன்.
அப்போது அரசியல் பேசவில்லை, குடும்ப விசயம்தான் பேசினோம் என்று செய்தியாளர்களிடம் கூறினாலும் அவர் என்ன பேசினார் என்ற தகவல் கசிந்துள்ளது. அதேபோல சசிகலாவை எம்.பி., தம்பித்துரை சந்தித்து பேசியதன் பின்னணியும் வெளியாகியுள்ளது.
சிறையில் சசிகலாவை சந்தித்தார் தினகரன். ஜனாதிபதி தேர்தலில் நம்முடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து இருவரும் விவாதித்தபோது, பாஜகவை ஆதரியுங்கள் என சசிகலா சொல்லியிருக்கிறார்.
அதற்கு தினகரனோ, எடப்பாடியிடம் ஆதரவைக் கேட்ட பிரதமர் நம்மிடம் கேட்கவில்லை. நமக்குள்ளேயே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறது பாஜக தலைமை. அதனால், தேர்தலை நாம் புறக்கணிக்கலாம் என சொல்லியிருக்கிறார்.
அப்போது, ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு என்ன பலம்ங்கிறதை நான் விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். நாம புறக்கணிச்சாலும் அவங்க ஜெயிப்பை தடுக்க முடியாது. புறக்கணிப்பதால் எந்த பலனும் இல்லாதப்போ எதுக்கு அந்த முடிவை எடுக்கனும்? அதிமுகவின் மொத்த எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்தால், பாஜகவை அதிமுக எதிர்க்கிறதுங்கிற இமேஜ் உருவாகும். ஆனா, நம்ம எம்.எல்.ஏக்கள் அப்படியா இருக்காங்க ? நாம இந்த முடிவை எடுத்தா, எடப்பாடி கேட்பாரா? கேட்கமாட்டாரு. அப்புறம் எதுக்கு, அப்படி ஒரு முடிவு எடுக்கணும்? அதனால புறக்கணிப்பு வேணாம் என அட்வைஸ் செய்து அனுப்பினாராம் சசி. ஆனாலும், பா.ஜ.க.வை ஆதரிப்பதில் முழு ஈடுபாடு தினகரனுக்கு இல்லையாம்.
தம்பித்துரை சந்திப்பு பின்னணி
அதேசமயம், பா.ஜ.க.கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே சசிகலாவை சந்தித்துள்ளார் தம்பிதுரை. அதிமுகவில் எடப்பாடி ஆதரவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டாலே பாஜகவுக்கு போதும். ஈசியாக ஜெயிப்பார்கள். ஆனால் அதிமுகவின் மொத்த ஆதரவும் தங்களுக்கு வேன்டும் என்றும், அதிமுகவிலுள்ள பிளவின் ஒரு தரப்பு கடைசி நேரத்தில் காங்கிரசை ஆதரித்துவிடக்கூடாது என்றும் நினைக்கிறதாம் பா.ஜ.க.தலைமை.
அதனால் தான் சசிகலாவின் ஆதரவை கேட்டு தம்பிதுரையை அனுப்பி வைத்ததாம் டெல்லி. அருண் ஜெட்லிதான் தம்பிதுரையிடம் பேசி பெங்களூருக்கு போய் வாருங்கள் என கேட்டுக்கொண்டாராம். அதிமுகவின் மேல் மட்டங்களில் விவாதிக்கப்படுகிற சங்கதி இது.