உள்ளே புகுந்து அடித்ததெல்லாம் ஓகே... ஏன் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருகிறது மியான்மர்??
டெல்லி: மியான்மருக்குள் இந்தியா நுழைந்து தீவிரவாதிகளை தாக்கி அழித்த பெருமிதங்கள் ஒருபுறம் இருக்க.. இந்த பயங்கரவாதிகள் பதுங்க ஏன் மியான்மர் இடம் கொடுக்கிறது என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
மணிப்பூர், அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்தினர் மீது வடகிழக்கில் தனி நாடு கோருகிற தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து இந்தியா தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இந்தியாவின் இந்நடவடிக்கை குறித்து சர்வதேச அளவிலான வாதங்கள் அரங்கேறுகின்றன.. அண்டை நாடான பாகிஸ்தானோ எங்கே தங்கள் நாட்டுக்குள் நுழைந்து இந்தியா தாக்குதல் நடத்திவிடுமோ என பதறுகிறது. இந்த நிலையில்தான் மியான்மருக்கும் தீவிரவாதிகளுக்குமான தொடர்பு என்ன? அவர்களுக்கு ஏன் அந்நாடு அடைக்கலம் கொடுக்கிறது என்கிற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
- கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே மியான்மரை மறைவிடமாகவே தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
- மியான்மர்இந்தியா எல்லையில்தான் பெரும்பாலான தீவிரவாதிகள் தங்களது முகாம்களை அமைத்துள்ளனர்.
- இவற்றில் இந்தியா, மியான்மரில் உள்ள நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைந்து அகன்ற நாகாலாந்து என்கிற தனிநாடு கோருகிற தீவிரவாத குழு முதன்மையானது.
- அகன்ற நாகாலாந்து கோருகிற குழுக்களில் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங் பிரிவு)வும் ஒன்று.
- இந்த அமைப்பின் தலைவரான கப்லாங், மியான்மர் மற்றும் சீனா எல்லைகளில்தான் வாழ்ந்து வருகிறார்.
- இதேபோல் பல்வேறு தீவிரவாத குழுக்களும் எல்லையில் முகாமிட்டுள்ளன.
- இக்குழுக்களுக்கு சீனா அதிநவீன ஆயுதங்களை வழங்கி வருவதால் மியான்மர் அரசாலோ ராணுவத்தாலோ தலையிட முடியாத கையறு நிலை இருக்கிறது.
- அத்துடன் இந்த தீவிரவாதிகளை அழிக்கும் வல்லமையும் யுக்தியும் மியான்மர் ராணுவத்துக்கும் இல்லையாம்.
- மேலும் மியான்மர் ராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் பலருக்கும் இந்த தீவிரவாத குழுக்கள் பணத்தை வெள்ளமாக வாரி இறைத்து வருகின்றனராம்... இதனால்தான் மியான்மர் ராணுவம் மவுனம் காத்தே வருகிறதாம்..
- மியான்மரின் இத்தகைய போக்குதான் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து தீவிரவாதம் உயிர்ப்போடு இருக்கவும் காரணம் என்கின்றனர் உளவுத் துறை அதிகாரிகள்.