ரஷ்யா, சீனாவுக்கு முன்பாகவே இந்தியாவுக்கு போன் செய்த டொனால்ட் ட்ரம்ப்! என்ன காரணம்?
ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டுக்கும் தொலைபேசியில் அழைப்புவிடுக்கும் முன்பாகவே இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகளின் தலைமைகளை போனில் அழைக்கும் முன்பாக இந்தியாவுக்கும் முக்கியம் கொடுத்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதும், அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ நாட்டு தலைவர்களை சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதன்பிறகு அமெரிக்காவின் இணைபிரியாத நண்பன் என வர்ணிக்கப்படும் இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி அழைப்பு மேற்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப். ஐந்தாவது நாடாக அவர் தேர்வு செய்தது இந்தியாவைத்தான்.
வல்லரசுகள்
ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டுக்கும் தொலைபேசியில் அழைப்புவிடுக்கும் முன்பாகவே இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். முன் எப்போதும் இல்லாத நடைமுறையாக உள்ளது இது. இரு நாடுகள் நடுவேயான ஒருமைப் பண்புகள்தான் இயல்பான இந்த நட்பு நெருக்கத்திற்கு காரணம் என்கிறார்கள் சர்வதேச விவகாரங்களை கவனிக்கும் நிபுணர்கள்.
முதலில் வாழ்த்து
டொனால்ட் ட்ரம்ப் அதிபரான பிறகு அமெரிக்கா செல்லும் முதல் பிரதமர் என்ற பெயருக்கு பாத்திரமாகப்போகிறவர் பிரிட்டீஷ் பிரதமர் தெரேசா மே. அதேநேரம், ட்ரம்ப், தேர்தலில் வெற்றி பெற்றதுமே, தொலைபேசியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் முக்கியமானவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
பிரசாரத்தின்போதே
ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, இந்து ஜனநாயக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், பேசியபோது, இந்தியாவுடன் சிறப்பான உறவை பேண உள்ளதாக தெரிவித்தார். மேலும், மோடியை எனர்ஜட்டிக்கான தலைவர் என புகழ்ந்ததோடு, அவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளதாகவும் அப்போது அவர் கூறினார்.
இந்தியருக்கு முன்னுரிமை
அமெரிக்காவை சேர்ந்த இந்தியரான அஜித் பாய்-யை கடந்த திங்கள்கிழமை, பெடரல் கம்யூனிகேஷன்ஸ் தலைவராக நியமித்தார். மோடி எப்படி தேச பக்தி என்ற வாத்ததை முன் வைத்தாரோ அதேபோல ட்ரம்ப்பும் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என கூறி ஆட்சியை பிடித்துள்ளார். இருவரது நட்பும் இயல்பாக அமையக்கூடியதே என்கிறார்கள் வெளியுறவு பார்வையாளர்கள். ட்ரம்ப்புடன் நேற்று போனில் பேசியபோது, இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.