மருமகளுக்கு கொலை மிரட்டல்... திருச்சி சிவா சொல்லும் பகீர் காரணம் இதுதான்!
மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள திமுக எம்.பி. திருச்சி சிவா மருமகளை மிரட்டவில்லை என்றும் ஜாதி ரீதியாக அவரை வெறுக்கவில்லை எனவும் விளக்கம் அளித்திருக்கிறார்.
டெல்லி: மருமகள் வேறு ஜாதி என்பதற்காக வெறுக்கவில்லை.. அவரை மிரட்டவும் இல்லை என திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.
திமுகவில் திராவிடர் இயக்க கொள்கையை பேசும் வெகுசிலரில் திருச்சி சிவா எம்.பி.யும் ஒருவர். ஆனால் திருச்சி சிவாவின் தனிப்பட்ட வாழ்க்கை பல சர்ச்சைகளை உருவாக்கியது.
திருச்சி சிவா மனைவி இறந்தபோது எழுதிய கட்டுரை அனைவரையும் உருக வைத்தது. அதேநேரத்தில் அதிமுக ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவுடன் திருச்சி சிவா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் அதிர வைத்தன.
தாக்கிய சசிகலா புஷ்பா
இதன் உச்சகட்டமாக டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா அடித்து தாக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் கொள்கைவாதி சிவா என்பதால் திமுக மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை காப்பாற்றி வந்தது.
மகன் அதிரடி புகார்
இதனிடையே திருச்சி சிவா மீது அவரது மகன் சூர்யா சிவா திடீரென ஒரு புகாரை தெரிவித்தார். ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் மனைவிக்கு திருச்சி சிவா கொலை மிரட்டல் விடுக்கிறார்; ஜாதி வெறியுடன் சிவா நடந்து கொள்கிறார் எனவும் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
ஜாதி காரணம் இல்லை
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் திருச்சி சிவா. அதில், தாம் ஜாதிய அடிப்படையில் மருமகளை வெறுக்கவில்லை. ஆனால் மகனுக்கும் மருமகளுக்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளது.
அச்சத்தால்தான் எதிர்ப்பு
என்னுடைய மகனை இறுதி காலத்தில் யார் பார்த்து கொள்வார்களோ என்கிற அச்சம் எனக்கு இருக்கிறது. அதனால்தான் அந்த திருமணத்தை என்னால் ஏற்க முடியவில்லை. இவ்வாறு திருச்சி சிவா கூறியுள்ளார்.