போனஸை அள்ளிக் கொடுத்தது ஏன்?- சூரத் வைர வியாபாரி சிவ்ஜிபாய் தொலாகியா விளக்கம்!
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் பிரபல வைர ஏற்றுமதி நிறுவனம் ஒன்று தீபாவளி பரிசாக பிளாட், கார், நகைகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை இது ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் சிவ்ஜிபாய் தொலாகியா காரணத்தைக் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் சிவ்ஜிபாய் தொலாகியா. பிரபல வைர வியாபாரியான இவர் தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக, கார், பிளாட் மற்றும் நகைகளை வழங்கினார்.
சிவ்ஜிபாய் தொலாகியா தனது செயலால் இந்தியாவையே தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர்.
தித்திப்பான தீபாவளி போனஸ்:
தொழிலாளர்களுக்கு தனது தீபாவளி போனஸ் குறித்து அவர் கூறுகையில், "எனது ஊழியர்களில் 207 பேருக்கு அபார்ட்மெண்ட்டும், 491 பேருக்கு காரும், 500 பேருக்கு நகைகளும் போனசாக கொடுத்துள்ளேன்.
நடுத்தரமான போனஸ்!:
என்னைப் பொறுத்த வரையில் இது மிகப்பெரிய போனஸ் என்று கூற மாட்டேன். வேண்டுமானால் நடுத்தரமானது என்று கூறலாம்.
விசுவாசத்திற்கு பரிசு:
எனது ஊழியர்கள் அவர்களது விசுவாசம் மற்றும் கடுமையான உழைப்பிற்காக இந்த போனசை பெற்றுள்ளனர்.
பகிர்ந்து கொடுப்பதே வாழ்க்கை:
பகிர்ந்து கொடுப்பதால், நமது சொத்து குறைந்து விடாது. எனது வாழ்வில் நான் கற்ற பாடம் இது.
கொடுத்துப் பெறுகின்றேன்:
ஒவ்வொரு முறையில் நான் சிலவற்றை எனது ஊழியர்களுக்கு கொடுக்கிறேன். அவர்களிடமிருந்து அதை விட அதிகமாக பெறுகிறேன் என்று தொலாகியா தெரிவித்துள்ளார்.