இந்தியாவில் ஏன் பால் விலை விண்ணை முட்டுகிறது?
டெல்லி: இந்தியாவில் ஏன் பால் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஆண்டுதோறும் பால் விலை 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் பால் விலை உயர்வின் சதவீதம் இரண்டு இலக்க எண்ணில் தான் இருந்துள்ளது. பாலின் மொத்த விலை அதிகரிப்பால் சில்லறை விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகிலேயே இந்தியா தான் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு ஆகும். உலக அளவில் உற்பத்தியாகும் பாலில் 16 சதவீதம் இந்தியாவில் இருந்து தான் உற்பத்தியாகிறது. இந்தியாவை அடுத்து அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அதிக அளவில் பால் உற்பத்தி செய்கின்றன.
விலை உயர்வு
வாடிக்கையாளர்கள் வாங்கும் விலையை வைத்து பால் விலை உயர்வு பற்றி பார்ப்போம். கடந்த நவம்பர் மாதம் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு 10.24 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் கிராமப்புறங்களில் பால் விலை உயர்வு 9.84 சதவீதமும், நகர்ப்புறங்களில் 10.97 சதவீதமும் அதிகரித்துள்ளது.
உயர்வு
கடந்த ஓராண்டாக பாலின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை அதிகரித்துள்ளது. கொள்முதல் விலை லிட்டருக்கு சராசரியாக ரூ.4.02ம், விற்பனை விலை லிட்டருக்கு ரூ.3.73ம் அதிகரித்துள்ளது.
பால்
இந்தியாவில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளபோதிலும் அதை உட்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது தான் பிரச்சனை என்று உணவு மற்றும் விவசாய அமைப்பு 2013ம் ஆண்டில் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பால் பொருட்களின் விலை அதிகமாக உள்ளதால் அவற்றை வாங்க முடியாத நிலையில் பல ஏழை இந்தியர்கள் உள்ளனர். இது தான் பாலை உட்கொள்வோரின் எண்ணிக்கை குறைய காரணம்.
தனி நபர் உபயோகம்
இந்தியாவில் கிராமப்புறங்களில் தனி நபர் பால் உபயோகம் மாதத்திற்கு 4.33 லிட்டர்(ரூ.106.25) ஆகும். இதுவே நகர்ப்புறங்களில் 5.42 லிட்டராக(ரூ.158.43) உள்ளது. கிராமப்புறங்களில் ஒரு வாரத்தில் 78 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 84.9 சதவீதம் பேரும் பால் உட்கொள்கிறார்கள். கிராமங்களை விட நகரங்களில் அதிகமானோர் பாலை உட்கொள்கிறார்கள்.
ஆபரேஷன் ஃபிளட்
1970களில் சிறு சிறு கூட்டுறவு சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான திட்டமான ஆபரேஷன் ஃபிளட்(flood) மூலம் பால் உற்பத்தியில் இந்தியா வெற்றி கண்டது. இந்த திட்டத்தை இந்திய வெள்ளை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் வர்கிஸ் குரியன் தலைமையிலான தேசிய பால்வள மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு நம் நாட்டில் பால் பற்றாக்குறையை நீக்கியது.
உற்பத்தி அதிகரிப்பு
2009-2010ம் ஆண்டில் 116.4 மில்லியன் டன்னாக இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி 2013-2014 ஆண்டில் 18 சதவீதம் அதிகரித்து 137.68 மில்லியன் டன்னாகியுள்ளது. கால்நடை உற்பத்தியை அதிகரிக்க அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தான் பால் உற்பத்தி அதிகரிக்க காரணம். 2012-2013ம் ஆண்டில் தனி நபருக்கு நாள் ஒன்றுக்கு 286 கிராம் அளவு தான் பால் கிடைத்தது.
பால் தயாரிப்பு மாநிலங்கள்
2013-2014ல் அதிகம் பால் உற்பத்தி செய்த 10 மாநிலங்ளை பார்ப்போம். 2013-2014ல் இந்தியாவிலேயே உத்தர பிரதேசம் தான் அதிகபட்சமாக 24.19 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது. அதையடுத்து ராஜஸ்தான்(14.57 மில்லியன் டன்), ஆந்திரா(13 மில்லியன் டன்), குஜராத்(11.11 மில்லியன் டன்) மற்றும் பஞ்சாப்(10.01 மில்லியன் டன்), மத்திய பிரதேசம்(9.60 மில்லியன் டன்), மகாராஷ்டிரா(9.09 மில்லியன் டன்), ஹரியானா(7.44 மில்லியன் டன்), பீகார்(7.20 மில்லியன் டன்), தமிழ்நாடு(7.05 மில்லியன் டன்) ஆகிய மாநிலங்கள் அதிகம் பால் உற்பத்தி செய்த மாநிலங்கள் ஆகும். 0.02 மில்லியன் டன் உற்பத்தியுடன் நாட்டிலேயே குறைவாக பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக மிசோரம் உள்ளது.
அரசு
பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறபோதிலும் பால் விலை உயர்வால் அத்திட்டங்கள் பலன் அளிக்காமல் உள்ளன.