அல் கொய்தா, ஐ.எஸ். இயக்கங்களை நிராகரிக்கும் இந்திய முஸ்லிம்கள்!!
டெல்லி: அல் கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத இயக்கங்களை இந்திய முஸ்லிம்கள் நிராகரிக்கவே செய்கின்றனர் என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்...
அல் கொய்தா இயக்கம் இந்திய துணைக்கண்டத்தில் காலூன்றும் வகையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்துக்கான அல் கொய்தாவின் தலைவராக இருப்பது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசீம் உமர்தான்...
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து மீண்டும் இந்திய முஸ்லிம்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அல்கொய்தா முயற்சிக்கிறது. இருப்பினும் ஒன்றிரண்டு தீவிர மதவாதம் பேசுகிற முஸ்லிம் இயக்கங்களைத் தவிர பெரும்பாலான முஸ்லிம்கள் அல் கொய்தாவை நிராகரிக்கவே செய்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் போய் தீவிரவாதியாக இருந்து போரிட்டுவிட்டு நாடு திரும்பிய ஆரிப் மஜீத்தையே இதற்கு நல்ல உதாரணமாக சொல்லாம். நமது ஒன் இந்தியா இணையதளத்திடம் பேசிய பல முஸ்லிம்களும் அல் கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை நிராகரிக்கவே செய்கின்றனர்.. ஐ.எஸ். இயக்கம் சர்வதேச அளவில் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது..
ஆனால் இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் அமைதியான வாழ்க்கை, நல்ல வேலைவாய்ப்பைத்தான் விரும்புகின்றனர்.. ஐ.எஸ். இயக்கமானது அல் பக்தாதியை அல்லாவின் வழித்தோன்றலாக பிரகடனப்படுத்துகிறது. ஆனால் இந்திய முஸ்லிம்கள் எழுப்புகிற முதன்மையான கேள்வி ... குரானின் எந்த பக்கத்தில் 'தலை துண்டிப்பு' சம்பவங்களை நியாயப்படுத்துகிறது என்பதுதான்.. அல் பக்தாதி தன்னைதானே இஸ்லாமிய தேசத்தின் தலைவராக (கலிபாவாக) பிரகடனப்படுத்திக் கொண்டால் அதை எப்படி ஏற்பது என்பதுதான் இந்திய முஸ்லிம்களின் கேள்வி.
இன்னமும் சொல்லப் போனால் முஸ்லிம்களின் நாடாக சொல்லப்படுகிற பாகிஸ்தானின் நிலைமையை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் நிம்மதியாக வாழ முடிகிறது என்பதே இங்குள்ள முஸ்லிம்களின் கருத்து. இதற்கு அப்பால் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா இயக்கத்தில் இணைகிற ஒன்றிரண்டு பேரையும் கூட மீட்டு வந்து அவர்களுக்கு அறிவுரை சொல்லுகிற நிலையில்தான் இந்திய முஸ்லிம்கள் சமூகம் இருக்கிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆரீப் மஜீத் தமது 3 நண்பர்களுடன் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தார்.. ஆனால் ஈராக்கில் தீவிரவாதிகள் அவரை கழிவறையை சுத்தப்படுத்தும் பணியில்தான் ஈடுபடுத்தியிருந்தார்கள்... சில மாதங்களில் ஆரீப் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்.. அவரிடம் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம், ஐ.எஸ். இயக்கம் ரத்தத்தைத் தான் விரும்புகிறது.. தாங்கள் மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற தன்முனைப்புக்காக ஐ.எஸ். இயக்கம் போரிடுகிறது என்றே கூறியிருந்தார்.
ஐ.எஸ். மற்றும் அல்கொய்தாவில் இணைகிற இளைஞர்களை மீட்டு வருவதற்காகவே 'சக்கரவியூகம்' என்ற ஆபரேஷனை மேற்கொண்டுள்ளது. ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா இயக்கத்தில் இணைய முயற்சித்த இளைஞர்களை விமான நிலையத்தில் கூட அதிகாரிகள் மீட்டிருக்கின்றனர்... இப்படி மீட்கப்படும் இளைஞர்கள் முதலில் காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் அந்த இளைஞர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திடம் இருந்து இந்திய முஸ்லிம்கள் பொதுவாக விலகி இருக்கவே விரும்புகின்றனர் என்பதே யதார்த்தம் என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.