60 சதவீத மக்கள் மத்திய அரசு மீது கோபத்தில் உள்ளனர்: ஃபாரின் ரிட்டர்ன் ராகுல் ஷார்ப் அட்டாக்!
டெல்லி: நல்ல நாள் வந்துவிட்டதாக கூறிய அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டதாக மக்களவையில் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். மேலும், பாஜக அரசு முழுக்க, தொழிலதிபர்களுக்கு சாதகமான கட்சியாக மாறிவிட்டதாகவும், நாட்டின் 60 சதவீதம் மக்கள் இந்த அரசு மீது கோபத்தில் இருப்பதாகவும் அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார் ராகுல்காந்தி.
இரு மாத கால ஓய்வுக்கு பிறகு நாடு திரும்பிய ராகுல்காந்தி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டியிருந்த விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்று ஷார்ப்பாக உரையாற்றினார்.
இந்நிலையில் மக்களவையில் இன்று நடைபெற்ற விவசாய விவாதத்தில் ராகுல்காந்தி பங்கேற்று ஆக்ரோஷமாக பேசினார். அவர் கூறியாதாவது:
நமது நாட்டின் பிரதமருக்கு தேர்தலில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற வித்தை தெரிந்துள்ளது. ஆனால் விவசாயிகளை திருப்திப்படுத்த தெரியவில்லை. அதிநவீன ஆயுதங்களை பற்றி இந்த அரசு பெருமை பேசுகிறது. நாட்டில் 60 சதவீதம் மக்கள் அரசு மீது கோபத்திலுள்ளனர். இதுகுறித்து யாரும் பேசவில்லை.
நல்ல காலம் பிறக்க உள்ளதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசு, முழு தோல்வியடைந்துவிட்டது. இந்த அரசு வந்த பிறகு விவசாயத்தின் வளர்ச்சி வெறும் 1 சதவீதமாக உள்ளது. காங்கிரஸ் அரசில் விவசாய வளர்ச்சி 4.2-ஆக இருந்தது. இந்தியா ஒளிர்வதாக பிரச்சாரம் செய்த பாஜக அரசு ஆட்சியின்போது (வாஜ்பாய் அரசு) கூட, விவசாய வளர்ச்சி 2.6 சதவீதமாகத்தான் இருந்தது.
பாஜக அரசு முழுக்க தொழிலதிபர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் சாதகமான அரசாக உள்ளது. விவசாயத்தை நீங்கள் நலிவுறச் செய்கிறீர்கள். அதன்பிறகு சட்டத்தின் மூலம், விவசாயிகளை அடித்து நொறுக்கி நிலங்களை பறித்து, தொழிலதிபர்களுக்கு கொடுக்கிறீர்கள். பளபளக்கும் கார்களில் செல்லும் தொழிலதிபர்கள்தான், இந்த நாட்டின் அடித்தளம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
ராகுல்காந்தியின் ஷார்ப் தாக்குதலை தாங்க முடியாமல், பாஜக எம்.பிக்கள் குறுக்கே புகுந்து கோஷமிட்டனர். ஆனால் நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் பேச அனுமதியுள்ளது என்று கூறி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு அவர்களை சமாதானப்படுத்தினார்.