பிடித்து உலுக்கி... சசிகலா அடித்த அடியில் அறுந்து போன திருச்சி சிவாவின் சங்கிலி!
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கும், திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவுக்கும் இடையே நடந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. திருச்சி சிவா கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலி அறுந்து போகும் அளவுக்கு அடித்துள்ளார் சசிகலா புஷ்பா.
இந்த இருவர் குறித்தும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சர்ச்சை வெளியானது. இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பின. ஆனால் அது திரித்து வெளியிடப்பட்டது என்று பின்னர் செய்திகள் வெளியாகின. அதேசமயம், இதுகுறித்து இருவரது தரப்பிலும் எந்த பேச்சும் மூச்சும் அப்போது வெளியாகவில்லை.
இந்த நிலையில்தான் நேற்று இருவருக்கும் இடையிலான அடிதடி நடந்துள்ளது. சம்பந்தமே இல்லாமல் இருவரும் திடீரென மோதிக் கொண்டதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
என்ன காரணம்?
முதல்வர் ஜெயலலிதா குறித்தும், தமிழக அரசு குறித்தும் அவதூறாக திருச்சி சிவா பேசியதால்தான் அடித்ததாக கூறுகிறார் சசிகலா புஷ்பா.
பெரிதுபடுத்த வேண்டாம்
திருச்சி சிவா இதுகுறித்து பெரிய அளவில் பேசவே விரும்பவில்லை. செக்கிங் பாயிண்ட்டில் வைத்து பிரச்சினை ஏற்பட்டது. இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அவர் ஒரு நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.
வேறு காரணம்?
ஜெயலலிதா குறித்து திருச்சி சிவா காவலர்களிடம் பேசினார் என்பதால் அடித்தேன் என்று சசிகலா புஷ்பா கூறுவது வலுவில்லாத காரணமாகவே பார்க்கப்படுகிறது. அதைத் தாண்டி வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அரசியல் வட்டாரத்தில் சிலர் எழுப்புகின்றனர்.
அடித்த அடியில் சங்கிலி அந்து போச்சு!
நேற்று நடந்த மோதலின்போது சசிகலா புஷ்பா கடும் கோபத்துடன் இருந்ததாக சொல்கிறார்கள். திருச்சி சிவாவை பயங்கரமக உலுக்கி அவர் சரமாரியாக அடித்துள்ளார். அதில் சிவா போட்டிருந்த தங்கச் சங்கிலி அறுந்து கீழே விழுந்தது. அந்த அளவுக்கு உலுக்கி விட்டாராம் சசிகலா புஷ்பா.
வீடு புகுந்து தாக்குதலா?
முன்னதாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு சசிகலா புஷ்பா கொடுத்த தொலைபேசி பேட்டியின்போது எனது டெல்லி வீட்டை அடித்து நொறுக்கி விட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால் வீட்டுக்குப் போகிறேன். அவருக்கும் திருப்பி கொடுக்கனும்ல என்று கூறியிருந்தார். இதனால் இந்த மோதல் இப்போதைக்கு தீராது என்றும், இது வேறு வேறு பாதையில் போக வாய்ப்புள்ளதாகவும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.