முல்லா மன்சூர் தாலிபான்களின் தலைவராகியுள்ளதால் இந்தியாவுக்கு ஆபத்து!
டெல்லி: தாலிபான் தலைவராக முல்லா அக்தர் மன்சூர் பதவிக்கு வந்துள்ளது இந்தியாவுக்கு அவ்வளவு நல்ல சேதி இல்லை என்கிறது உளவுத்துறை.
தாலிபான் தீவிரவாத இயக்க தலைவர் முல்லா ஓமர் மரணமடைந்த நிலையில், அதன் புதிய தலைவராக முல்லா அக்தர் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான்
இவரை நியமித்தது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ என்று தெரிகிறது. ஐஎஸ்ஐயின் தீவிர சிபாரிசின் பேரில்தான் தாலிபான் இயக்க தலைவராக முல்லா அக்தர் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் பிரச்சினை
முல்லா ஓமர் ஏன் இந்தியாவுக்கு ஆபத்தானவர் என்பதற்கு காஷ்மீர் பிரச்சினை முக்கிய காரணமாக உள்ளது. காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்கும் ஆர்வம் கொண்டவர் முல்லா அக்தர் மன்சூர். காஷ்மீருக்காக தாக்குதலில் ஈடுபடும் ஜிகாதி எனப்படும் 'புனித போராளிகளுடன்' முல்லா அக்தர் மன்சூர் பலமுறை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக உரையாற்றி அவர்களை தூண்டிய வரலாறு உள்ளது.
கந்தகார் விமான கடத்தல்
எனவே, முல்லா அக்தர் மன்சூர் தலைமையலிலான தாலிபான்களை, காஷ்மீரை சீர்கெடுக்க பாகிஸ்தான் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்திய விமானம் ஐசி-814 கடத்தப்பட்டு கந்ததகார் கொண்டு செல்லப்பட்டபோது, விமான நிலையத்திற்கு சென்று தீவிரவாதி மவுலானா மசூத் அசாரை வரவேற்றவர் அப்போதைய ஆப்கன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சரான முல்லா அக்தர் மன்சூர்.
சொந்த புத்தியில்லை
முல்லா ஓமரை போல, முல்லா அக்தர் மன்சூர் சொந்தமாக யோசிக்க கூடிய புத்தி இல்லாதவர் என்கிறது இந்திய உளவு அமைப்பு. ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சி.டி.சகாய் கூறுகையில், "கந்தகாரில் விமானத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு தீவிரவாதிகள் இந்தியாவிடம் பேரம் பேசினர். அப்போது, தீவிரவாதிகள் கேட்ட சில கோரிக்கைகளை முல்லா ஓமர் வேண்டாம் என்று தடுத்துவிட்டார்.
முல்லா ஓமரின் கொள்கை
காஷ்மீர் தீவிரவாதியின் சடலத்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்றும், பிணையக் கைதிகளுக்காக இந்தியா பணம் அளிக்க வேண்டும் என்றும் தீவிரவாதிகள் வைத்த கோரிக்கைகளை இந்தியாவிடம் தெரிவிக்க மறுத்தது முல்லா ஓமர். இஸ்லாம் மார்க்கத்திற்கு, இதுபோன்ற செயல்கள் ஏற்புடையதில்லை என்று முல்லா ஓமர் கூறியிருந்தார்.
முல்லா மன்சூர் கைப்பாவை
ஆனால், முல்லா அக்தர் மன்சூர் பாகி்ஸ்தான் சொல்வதை கேட்கும் ஒரு கைப்பாவை. இதுதான் இந்தியாவுக்கு கவலை கொள்ள செய்யும் அம்சம். அதேநேரம், தாலிபான் இயக்கத்திற்குள்ளேயே பிளவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக இந்திய உளவுத்துறை கருதுகிறது.
பிளவுக்கு வாய்ப்பு
முல்லா அக்தர் மன்சூர் ஒரு நாகரீக விரும்பி. வீட்டை விட்டு வெளியே போனால் ரேபான் கூலிங் கிளாஸ் இல்லாமல் போவதில்லை. இதையெல்லாம் தாலிபான்கள் பலர் விரும்பவில்லை. மேலும், முல்லா ஓமர் மகனான யாகூப் தாலிபான்களின் தலைவராக வேண்டும் என்ற விருப்பமும் அந்த இயக்கத்தை சேர்ந்த பலருக்கு உள்ளதாம். இதனால், முல்லா அக்தர் மன்சூருக்கு எதிராக தாலிபான்களுக்குள்ளேயே கலகம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
தோகாவும் கொதிப்பு
மேலும், தாலிபான்கள் தோகாவிலும் ஒரு பிரிவை நிறுவியுள்ளனர். ஆப்கன் அரசுடனான தாலிபான்களின் அமைதி பேச்சுவார்த்தையை தோகா பிரிவுதான் முன்னெடுத்து செல்கிறது. ஆனால், முல்லா அக்தர் மன்சூர் தாலிபான்களின் தலைவரான பிறகு தோகா பிரிவு புறக்கணிக்கப்படுகிறதாம். எனவே யாகூப்பின் உதவியோடு, தாலிபான்கள், தங்களுக்குள் அடித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறது இந்தியா.