லாரி லாரியா மண் அள்ளிட்டுப் போவது போல பத்திரத்தைக் கொண்டு போய் கொட்டும் அதிமுக "அ"!
டெல்லி: பிரமாணப் பத்திரங்கள் என்ற பெயரில் லாரி லாரியாக எதற்காக இப்படி பத்திரப் பேப்பர்களைக் கொண்டு போய் தேர்தல் ஆணையத்தில் அதிமுக அம்மா அணி குவித்துக் கொண்டிருக்கிறது என்பது பெரும் மர்மமாக உள்ளது.
நேற்று மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர் இந்த கோஷ்டியினர். இப்படி குவியல் குவியலாக பேப்பர்களைக் கொண்டு போய் குவிப்பதற்கான ஒரே நோக்கம் - முடிவு எடுக்க விடாமல் தேர்தல் ஆணையத்தைக் குழப்பி கால தாமதம் செய்வதாக மட்டுமே இருக்க முடியும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் நமக்குக் கிடைக்காமல் போனால் கூட பரவாயில்லை, ஓ.பி.எஸ்ஸுக்கு அது போய் விடக் கூடாது என்பது மட்டுமே சசிகலா- தினகரன் குரூப்பின் ஒரே எண்ணம் என்றும் சொல்கிறார்கள். இதனால் லாரி லாரியாக பேப்பர்களைக் கொண்டு போய் தேர்தல் ஆணையத்தில் கொட்டி வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
4 லாரிகளில்
நேற்று மட்டும் 4 லாரிகளில் பத்திரங்களைக் கொண்டு வந்தார் சட்ட அமைச்சரான சி.வி.சண்முகம். நேற்று மட்டும் மொத்தம் ஒன்றரை லட்சம் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். நேற்று வந்த லாரிகளைப் பார்த்து தேர்தல் ஆணையமே சற்று ஜெர்க் ஆகிப் போனதாம்.
இதுவரை 3 லட்சம் பத்திரங்கள்
ஏற்கனவே அதிமுக அம்மா அணி சார்பில் ஒன்றே முக்கால் லட்சம் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது தாக்கலாகியுள்ளதையும் சேர்த்தால் மொத்தப் பத்திரத்தில் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டி விட்டது. ஓ.பி.எஸ் தரப்பு இதுவரை ஒன்றரை லட்சம் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்து.
16ம் தேதி வரை இப்படித்தான்
இரு தரப்பும் இரட்டை இலை தொடர்பாக வருகிற 16ம் தேதி வரை பத்திரங்களைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரு தரப்பும் மாறி மாறி பேப்பர் கட்டுக்களை கொண்டு வந்து குவித்துக் கொண்டுள்ளனர்.
கையெழுத்து வாங்கிக் குவிக்கின்றனர்
கட்சி தங்கள் பக்கம்தான் உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக கட்சி நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கி அதைத்தான் தற்போது கட்டுக்கட்டாக கொண்டு வந்து தேர்தல் ஆணையத்தில் இரு தரப்பும் சமர்ப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் லாரி லாரியாக மணலைக் கொண்டு வந்து கொட்டுவது போல இப்படி லட்சக்கணக்கில் கொண்டு குவிப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.