ஆரம்பத்திலிருந்தே தமிழகம் மீது காட்டம் காட்டும் பாஜக உமாபாரதி.. !
பெங்களூர்: காவிரி விவகாரத்தில் நாட்டாமை செய்ய, கர்நாடகா உமா பாரதியை தேர்ந்தெடுக்க அவர் மத்திய நீர் வளத்துறை அமைச்சர்என்பது மட்டும் காரணமல்ல. அதற்கும் மேல் பல பந்த பாசங்கள் அந்த மாநிலத்தோடு உமா பாரதிக்கு உள்ளது.
காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்படத் தொடங்கியதும், திடீரென பேச்சுவார்த்தை மூலம்தான், காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூற ஆரம்பித்தார். அம்மாநில அறசியல் தலைவர்கள் எல்லோரும் அதே பல்லவியை பாட ஆரம்பித்தனர்.
ஆனால், பிரதமர் மோடியோ, இக்கோரிக்கைக்கு அசையவில்லை. மேலிட உத்தரவால் கர்நாடக பாஜக தனது பல்லவியை மாற்றியது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பிரதமர் இதில் தலையிட முடியாது. இந்த கோரிக்கை சரியில்லை என்று சதானந்தகவுடா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கூற ஆரம்பித்தனர்.
அதேநேரம், மோடி தலையிடாவிட்டால் கர்நாடகாவில் பாஜகவின் செல்வாக்கு குறைந்துவிடும் என்ற அச்சம் ஒருபக்கம், அம்மாநில பாஜகவினருக்கு உள்ளது. எனவே மாற்று வழியை கண்டிபிடிக்க மூளையை கசக்கி யோசித்தபோது சிக்கியவர்தான் உமா பாரதி.
நேற்று யாருக்கும் அறிவிக்காமல் டெல்லியில் உமா பாரதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் சதானந்தகவுடா. எல்லா பிரச்சினைகளையும் மோடியே தீர்க்க முடியாது. சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் உமா பாரதி கர்நாடகாவுக்கு உதவ தயாராக உள்ளார் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறது கர்நாடக பாஜக.
உமா பாரதிக்கு எப்போதுமே கர்நாடகா மீது பாசம் அதிகம் என்பது அவரது நடவடிக்கைளை உனிப்பாக கவனிப்போருக்கு தெரியும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உமா பாரதி பெரும் முட்டுக்கட்டை போட்டுவருவதாக கூறப்படுகிறது. மேலாண்மை வாரியம் குறித்து உமா பாரதி எதிர்மறை கருத்துக்களையே கூறி வருகிறார்.
சமீபத்தில் கூட, மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடக அரசின் உரிமை என பேட்டியளித்து ஷாக் கொடுத்தவர்தான் உமா பாரதி. இவருக்கு கர்நாடகா மீது ஏன் இந்த பாசம் தெரியுமா.. ஆன்மீகமும், பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் மீதான பக்தியும்தான்.
பாஜகவிலிருந்து உமா பாரதி நீக்கப்பட்டபோது, இடையில் பஞ்சாயத்து பேசி மீண்டும் பாஜகவில் இணைக்க செய்தவரும் இதே விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிதான். உமா பாரதிக்கு சன்னியாசம் கொடுத்ததும் அவர்தான். எனவேதான், "விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமியிடமிருந்து ஒரு போன் கால் சென்றால் காவிரி விவகாரம் முடிவுக்கு வந்துவிடும்" என்று கன்னட முன்னணி செய்தி சேனல் ஒன்றின் ஆசிரியர் லைவ் நிகழ்ச்சியில் நேற்று தெரிவித்தார்.
கர்நாடகா மீது கொண்ட பாசத்தால் இயல்பாகவே தமிழகத்தை மாற்றான் குழந்தையாகவே கருத தொடங்கிவிட்டார் உமா பாரதி. எனவே இருட்டில் சிக்கியுள்ள கர்நாடக அரசுக்கு ஒரே கலங்கரை விளக்கமாக காட்சியளிக்கிறார் உமா பாரதி. இன்று முதல்வர் சித்தராமையாவும், மூத்த அமைச்சர்களும், இந்த இக்கட்டில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று டெல்லியில் உமா பாரதியை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.