ஸ்ட்ரெச்சர் தர மறுப்பு.. மருத்துவமனையில் கணவரை தரையில் இழுத்தே சென்ற மனைவி..!
உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை அழைத்து செல்ல சக்கர வண்டி தராததால், அவரது மனைவி முதல் தளம் வரை இழுத்தே சென்று சிகிச்சைக்காக சேர்த்தார்.
அனந்தபூர்: சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சென்றவருக்கு ஸ்ட்ரெச்சர் தர நிர்வாகம் மறுத்ததால் அவரை முதல் மாடிக்கு அவரின் மனைவி இழுத்தே சென்ற பரிதாப சம்பவம் ஆந்திராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரபிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டம், குண்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாச்சாரி. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது மனைவி ஸ்ரீவாணி அழைத்து சென்றார்.
ஆட்டோவில் சென்ற அவர்கள் மருத்துவமனையில் இறங்கியுள்ளனர். கணவரால் நடக்க முடியாததால், மருத்துவமனை நிர்வாகத்திடம் ஸ்ட்ரெச்சர் கேட்டுள்ளார். ஆனால் நிர்வாகத்தினர் ஸ்ட்ரெச்சர் தர மறுத்துள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த அப்பெண், சிறிது நேரம் காத்திருந்துவிட்டு பின், அவரே மருத்துவமனையின் முதல் தளத்துக்கு தனது கணவரை சரிவுப்பாதையில் கையால் இழுத்து சென்றார்.
இதனை அங்குள்ள மக்கள் வேடிக்கை மட்டும் பார்த்தபடி இருந்தனர். ஆனால் யாரும் ஸ்ரீவாணிக்கு உதவ முன்வரவில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கணவரை முதல் தளத்துக்கு இழுத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தார் ஸ்ரீவாணி. அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.