"நாடு விட்டு நாடு" தாண்டி வந்து 6 பீகார்வாசிகளை கொன்றுவிட்டு நேபாளத்துக்கு தப்பிய யானை!
பாட்னா: நாடு விட்டு நாடு தாண்டி வந்து பீகாரில் 6 அப்பாவி பொதுமக்களைக் கொன்றுவிட்டு தப்பியிருக்கிறது ஒரு யானை..
பீகார் மாநிலத்துக்குள் 2 நாட்களுக்கு முன்னர் நுழைந்த யானை ஒன்று கிராம மக்களை விரட்டியது. போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் மதம் கொண்டு பிளிறித்திரிந்த அந்த யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர்.
ஆனால் சுற்றிலும் ஏராளமான பொதுமக்கள் சூழ்ந்துக்கொண்டு கூச்சலிட்டதால் யானையின் வெறி மேலும் அதிகமானது. யானை சிதாமார்கி மாவட்டத்தில் பொதுமக்களை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். மதுபானி மாவட்டத்தில் 2 பேர் பலியாகினர்.
யானையை பிடிக்க போலீசார் செய்த அனைத்து முயற்சியும் தோல்வியிலே முடிந்தது. பெரும் போராட்டத்திற்கு பின்னர் யானை காட்டுப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
இந்த யானை மதுபானி மாவட்டம் ஜெய்நகரில் நேபாள நாட்டையொட்டிய சர்வதேச எல்லைக் கோட்டை அதிகாலை 2.30 மணிக்கு கடந்து நேபாளத்துக்குள் நுழைந்துவிட்டது.
நேபாள வனப்பகுதியில் இதர யானைகளுடனான மோதலால் சர்வதேச எல்லையைக் கடந்து இந்தியாவின் பீகாருக்குள் அந்த யானை நுழைந்திருக்கலாம் என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்...
தீவிரவாதிகள் மட்டுமல்ல.. யானைகளும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துகிறதே!