விபத்துக்களை தடுக்க 3,430 ஆளில்லா லெவல் கிராசிங்குகளை அகற்ற திட்டம்- செலவு ரூ6,581 கோடி!
டெல்லி : நாடு முழுவதும் உள்ள 3430 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் அகற்றப் படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.
2015- 2016-ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை லோக்சபாவில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்துள்ளார். வறுமை ஒழிப்பை இலக்காக கொண்டு ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரயில்வே வேகத்தை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், நெரிசல் மிக்க தடத்தில் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. தாமதமின்றி ரயில்கள் சரியான நேரத்துக்கு செல்வது உறுதி செய்யப்படும் எனவும், தொலைநோக்கு திட்டத்துக்கு பாதகமின்றி உடனடி தேவை நிறைவேற்றப்படும் எனவும் பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகளைக் கடக்க முற்பட்டு வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. எனவே, வருங்காலத்தில் இத்தகைய விபத்துக்களைத் தடுக்கும் வகையில், ரூ. 6,581 கோடி செலவில் இந்தியா முழுவதும் உள்ள 3430 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஒழிக்கப்பட்டு அங்கு புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுள்ளது.
மேலும், விபத்துக்களை தவிர்ப்பதற்காக ஆளில்லா கிராசிங்களில் ஒளி மற்றும் ஒலி மூலம் எச்சரிக்கைகள் அமைக்கப்படும். பாதுகாப்புக்காக இஸ்ரோவுடன் இணைந்து திட்டங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்லது.