'ஜெ. வழக்கு': மகாராஷ்டிர அமைச்சர் தேர்தலில் போட்டியிட மும்பை ஹைகோர்ட் விதித்த வாழ்நாள் தடை!
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும் ரூ. 100 கோடி அபாரதமும் விதிக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீது வரும் 27ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீது வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது.
மகா. முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு..
இந் நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரான பாபன்ராவ் கோலாப். இவர் 1995-98 வரை பாஜக-சிவசேனா கூட்டணி அரசில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார்.
அன்னா ஹசாரே கிளப்பிய ஊழல்
இவர் மீது அன்னா ஹசாரே அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்ந்ததால் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். இதனைத் தொடர்ந்து இவர் மீதும் மனைவி "சசிகலா" மீதும் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டு அது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
3 ஆண்டு சிறை- எம்.எல்.ஏ பதவி இழப்பு
இந்த வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. பாபன்ராவ் கோலப்புக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அவர் தமது எம்.எல்.ஏ. பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வாழ்நாள் தடை விதித்த மும்பை ஹைகோர்ட்
இதனைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். அம்மனு மீது கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாம் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக அப்போது பாபன்ராவ் கூறியிருந்தார்.
கர்நாடகா ஹைகோர்ட்டில் ஜெ. மனு
தற்போது தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கலான ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. மேலும் அவரது ஜாமீன் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு என்ன நடக்குமோ...?