மரண தண்டனையை எதிர்த்தவர் கலாம்- மரியாதை செலுத்தும் வகையில் யாகூப் மேமனின் தூக்கு ரத்தாகுமா?
டெல்லி: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்கள் மாரடைப்பால் காலமான நிலையில், மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தவர் அவர் என்பதால் தூக்குக் கயிறுக்கும், கடைசி தீர்ப்பிற்கும் இடையில் காத்துள்ள யாகூப் மேமனின் தண்டனை கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறைக்கப்படுமா என்ற பில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.
மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பது நாட்டின் குடியரசுத் தலைவருக்கு மகிழ்ச்சியான பணி அல்ல என்று அப்துல் கலாம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் கருத்திற்கும் ஆதரவு தெரிவித்திருந்திருந்தார்.
இதுகுறித்து கலாம் தான் எழுதிய டர்னிங் பாயிண்ட்ஸ் என்ற புத்தகத்தில், "குற்றத்தின் தன்மை, குற்றத்தின் கடுமை, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் சமூக, பொருளாதார நிலைமை போன்றவற்றை ஒரு சாதாரண குடிமகனின் நிலையில் இருந்து பரிசீலிக்க வேண்டும் என நான் நினைத்தேன்.
விசாரணை நீதிமன்றத்தில் வழங்கப்படுகிற தூக்குத் தண்டனைகள் அனைத்தும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றங்களில் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதை குடியரசுத் தலைவர் உறுதி செய்வது என்பது மிகவும் கடினமான பணி ஆகும். குடியரசுத் தலைவர் மாளிகையில் பல ஆண்டுகளாக இப்படி ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இது, எந்தவொரு குடியரசுத் தலைவரும் மகிழ்ச்சியுடன் முடிவு எடுக்கக்கூடிய பணி அல்ல.
கடந்த 1990 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் 14 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற தனஞ்சய் சாட்டர்ஜிக்கு மரணதண்டனையை உறுதி செய்தேன். இவர் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
எனினும், மரண தண்டனையை எதிர்த்து போடப்படுகிற மேல் முறையீட்டு வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்கிறபோது தண்டிக்கப்படுகிற கைதியின் வாழ்வாதார நிலை, அவரது குடும்பத்தின் நிலை ஆகியவற்றை சட்ட அமலாக்க அதிகாரிகள் கண்டறிந்து தண்டனைக்கு பரிசீலிக்க வேண்டும். இத்தகைய ஆய்வு குற்றவாளி எந்த நோக்கத்தில் குற்றத்தை செய்தார் என்பதை தெளிவாக தெரிய வைத்து விடும். நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள்.
இந்நிலையில், செயற்கையாக அல்லது உருவாக்கப்பட்ட ஒரு சாட்சியத்தின் அடிப்படையில் ஒரு உயிரை எடுப்பதற்கு எந்தவொரு மனித அமைப்போ அல்லது மனிதரோ தகுதியானவர்கள் என்று என்னால் உறுதியாக கருத இயலவில்லை" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில் கலாம் மறைந்துள்ளார். எனவே அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் யாகூப் மேமனின் தூக்குக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.