விமான கொள்முதல் டெண்டர்...பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கருக்கு அக்னி பரிட்சை
பெங்களூரு: பாதுகாப்பு துறை அமைச்சராக மனோகர் பாரிக்கர் பதவியேற்ற பிறகு அவர் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக ஆவ்ரோ விமான மாற்று திட்டமாக இருக்க போகிறது.
கோவா முதல்வராக பதவி வகித்த மனோகர் பாரிக்கர் சமீபத்தில் மோடி அமைச்சரவையில் பாதுகாப்பு துறையை பெற்றார். இன்று டெல்லியில் ந டைபெறும் Defence Acquisition Council (DAC) என்ற முக்கியமான ஆலோசனை கூட்டத்தில் பாரிக்கர் பங்கேற்கிறார். இந்த ஆலோசனையின்போது ஆவ்ரோ மாற்று திட்டம் குறித்து முக்கியமான ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு இணை அமைச்சர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு துறை செயலாளர், உளவுத்துறை அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு மட்டத்திலான உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
பாரிக்கர் இந்த விவகாரத்தில் எப்படி முடிவெடுக்கப்போகிறார் என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. ஏனெனில் இந்திய விமானப்படையில் உள்ள ஆவ்ரோ வகை பழைய விமானங்களை மாற்றி புதியவகை விமானங்களை படையில் சேர்க்க கடந்த மத்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், முழுக்க தனியார் அமைப்பே இந்த விமானங்களை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டதுதான் சர்ச்சைக்கு வித்திட்டது.
மொத்தம் ரூ.13 ஆயிரம் கோடி செலவிலான இந்த திட்டத்தை தனியாரை கொண்டு செயல்படுத்த அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி முடிவெடுத்தபோது, சக அமைச்சர்கள் சிலரே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது வரலாறு. இந்நிலையில்தான் பாஜக தலைமையிலான மத்திய அரசின் பிரதமரான மோடி, மேக்இன்இந்தியா கோஷத்தை முன்னெடுத்துள்ளார். இந்தியாவிலேயே அனைத்து பொருட்களும் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பது அந்த கோஷத்தின் பொருள்.
ஆனால், மோடியின் நெருங்கிய சகாவான மனோகர் பாரிக்கர் வெளிநாட்டு தனியார் அமைப்பை கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் அளிப்பாரா இல்லையா என்பது தற்போது எழுந்துள்ள சிக்கல். வெளிநாட்டு நிறுவனங்களிடம் விமானங்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளபோதிலும்கூட, இந்தியாவில் ஒரு பார்ட்னரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம் என்றும் டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பார்ட்னர் எச்.ஏ.எல் அமைப்பாக மட்டும் இருக்க கூடாது என்பது துணை நிபந்தனையாகும்.
காலம் காலமாக எச்.ஏ.எல் அமைப்புதான் இந்திய விமான படைக்கான உபகரணங்களை தயாரித்து வரும் நிலையில் அதற்கு மாற்றாக ஒரு இந்திய நிறுவனத்தை தேட வெளிநாட்டு விமான தயாரிப்பு நிறுவனங்கள் மிகவும் சிரமப்பட்டன. மொத்தம் 56 விமானங்களை சப்ளை செய்ய வேண்டும், அதில் 40 விமானங்கள் இந்திய பார்ட்னரால்தான் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையால் வெளிநாட்டு விமான தயாரிப்பு நிறுவனங்கள் தலையை சொறிந்து கொண்டிருந்தன.
அப்போதுதான், டாடா-ஏர்பஸ் நிறுவனம் நாங்கள் அதை செய்ய தயார் என்று முன்னுக்கு வந்தது. இப்போது டாடா மட்டுமே இந்தியாவில் பார்ட்னராக உள்ள ஒரே நிறுவனமாகும். ஆவ்ரோ வகை விமானங்களுக்கு பதிலாக ஏர்பஸ் சி295 வகை விமானங்களை சப்ளை செய்ய டாடா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் பாரிக்கர் இதற்கு சம்மதித்து டெண்டரை அனுமதிப்பாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. டாடா தலைவர் ரத்தன் டாடா எச்ஏஎல் போர்டின் தலைவராக இருந்த அனுபவத்தை தனது நிறுவன லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதாக எச்.ஏ.எல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய பொதுத்துறை பாதுகாப்பு அமைப்புகளின் போர்டுகளில் தனி நபர்களை சேர்மனாக நியமிக்கும் நடைமுறையை இனியாவது நீக்க வேண்டும், எச்.ஏ.எல்லும் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்பது அங்குள்ள சில அதிகாரிகளின் உள்ள குமுறலாக உள்ளது. ஓய்வுபெற்ற ஏர்மார்ஷல் மாதேஸ்வரன் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், இனி அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்திலும் எச்.ஏ.எல்லும் போட்டிபோடும் நிலையை கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாரிக்கர் செய்வாரா?