கார் தந்தாதான் தாலி கட்டுவேன்... அடம் பிடித்த ராணுவ வீரருக்கு 2 ஆண்டு திருமணத் தடை!
லக்னோ: மணப்பெண் வீட்டாரிடம் வரதட்சணையாக கார் கேட்ட ராணுவ வீரருக்கு 2 ஆண்டு திருமண தடையும், ரூ.81 ஆயிரம் அபராதமும் விதித்து உத்திரப்பிரதேசத்தில் கிராம பஞ்சாயத்து தீர்ப்பு அளித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டம் ரசூல்பூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கும், காசிம்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வரும் 24-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
திடீரென வரதட்சணையாக கார் வாங்கித் தந்தால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிப்போம் என மாப்பிள்ளை வீட்டில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மணமகளின் வீட்டார் உள்ளூர் பஞ்சாயத்தில் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக இரு வீட்டாரையும் பஞ்சாயத்தார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணையாக கார் கேட்டது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து கார் கேட்ட ராணுவ வீரர், இன்னும் இரண்டு ஆண்டுகள் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தனர். அதோடு, கார் வரதட்சணையாகக் கேட்டு மணமகள் வீட்டாரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக அவர்களுக்கு, ரூ. 81 ஆயிரம் அபராதத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் மாப்பிள்ளை வீட்டாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.