தரையிறக்கப்பட்ட "சண்டைக் கோழி"... "சூப்பர்" சுகோய்க்கு என்னாச்சு?
டெல்லி: மிகவும் இக்கட்டான நிலைக்கு இந்திய விமானப்படை தள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 200 சுகோய் போர் விமானங்களின் செயல்பாட்டை விமானப்படை நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் இந்திய விமானப்படையின் போர் விமானங்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.
பாகிஸ்தானுடன் எல்லை மோதல், சீனாவுடன் சிக்கல், தீவிரவாதிகளின் மிரட்டல் என்று தகிப்பான சூழலில் இருக்கும் இந்தியாவுக்கு இது சற்று பதட்டமான தருணங்கள்தான்.
தொழில்நுட்ப பரிசோதனைகளுக்காக ஒட்டுமொத்த சுகோய் போர் விமானங்களையும் திரும்ப அழைத்துள்ளது விமானப்படை. ஒவ்வொரு விமானத்தையும் முழுமையாக பரிசோதித்து சரியாக இருந்தால் மட்டுமே செயல்பட அனுமதிக்கப் போகிறார்கள்.
புனே விபத்துக்குப் பின்
சமீபத்தில் புனே அருகே சுகோய் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இரு விமானிகளும் உயிர் பிழைத்தனர். சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வந்ததால் இந்த முழுமையான செக்கப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முழு பரிசோதனை
இதுகுறித்து விமானப்படையின் செய்தித் தொடர்பாளரான விங் கமாண்டர் சிம்ரன்பால் சிங் பிர்டி கூறுகையில், அனைத்து சுகோய் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்தும் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. புனே விபத்துக்குப் பின்னர் விமானங்களின் தொழில்நுட்ப தரம் குறித்து ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
முடிந்த பிறகே
சோதனைகள் அனைத்தும் முழுமையாக முடிந்த பின்னரே அனைத்து விமானங்களும் மீண்டும் இயக்கப்படும் என்றார் பிர்டி.
சீரியஸ் பிரச்சினையா
ஆனால் ஒட்டுமொத்த விமானங்களையும் நிறுத்தும் அளவுக்கு சீரியஸான பிரச்சினை ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை பிர்டி விளக்கவில்லை. மேலும் என்ன மாதிரியான தொழில்நுட்பக் கோளாறு என்பது குறித்தும் அவர் விளக்கவில்லை.
முதல் முறையல்ல
சுகோய் விமானங்களின் செயல்பாட்டை ஒட்டுமொத்தமாக நிறுத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2 முறை இவ்வாறு செய்துள்ளது விமானப்படை.
ரஷ்யத் தயாரிப்பு
ரஷ்ய தயாரிப்பு போர் விமானம்தான் சுகோய். உலகின் அதி நவீன போர் விமானங்களில் இதுவும் ஒன்றாகும். 1997ம் ஆண்டு முதல் முறையாக விமானப்படையில் இது அறிமுகமானது.
நம்பகமானது
மிகவும் பாதுகாப்பான, நம்பகத்தன்மை வாய்ந்த போர் விமானமாக இது இந்திய விமானப்படையில் இருந்து வருகிறது.
அடிக்கடி சிக்கல்
இருப்பினும் அவ்வப்போது சுகோய் போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின, மேலும் தொழில்நுட்பப் பழுதுகளும் ஏற்பட ஆரம்பித்தன. புனேவில் நடந்த விபத்து 5வது விபத்தாகும்.
என்ஜின்தான் பிரச்சினை
இந்தியா தற்போது வைத்திருக்கும் சுகோய் எம் 30 எம்கேஐ விமானத்தின் என்ஜினில்தான் கோளாறு ஏற்படுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டது.
சர்வீஸ்
இதையடுத்து இந்த என்ஜின்களை சர்வீஸ் செய்யும் வேலையை விமானப்படை தொடங்கியது. ஆனால் அனைத்து விமானங்களின் என்ஜின்களையும் சர்வீஸ் செய்தால் விடிந்து போய் விடும் என்பதால், என்ஜினில் சிறிய அளவிலான மாற்றத்தை செய்ய ரஷ்ய நிபுணர்களின் ஆலோசனையுடன் திட்டமிடப்பட்டது.
2 வருடங்களில்
இதை அடுத்த 18 அல்லது 24 மாதங்களில் செய்து முடிக்க விமானப்படை திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பாக தற்போது ஒரு முழுமையான பரிசோதனைக்காக அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளனர்.
2012 முதல்
2012ம் ஆண்டு முதல்தான் சுகோய்க்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. பெரும்பாலான பிரச்சினைகளின்போது என்ஜின் பழுதுதான் அதிகம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போர் விமானங்கள் இரட்டை என்ஜினுடன் கூடியவை.
அப்துல் கலாம் பயணித்த பெருமையுடையது
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் சுகோய் -30 போர் விமானத்தில் பறந்து அனைவரையும் வியப்படைய வைத்தார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அவர் வானில் பறந்தார்.
பிரதீபாவும்
அதேபோல முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும் கூடந்த 2009ம்
ஆண்டு இந்த போர் விமானத்தில் பறந்து வரலாறு படைத்தார்.
இன்று சுகோயின் 200 விமானங்களும் தரையில் அமைதியாக நின்று கொண்டிருக்கின்றன.