என்னை ஏமாத்திட்டு வேற கல்யாணமா… துப்பாக்கி முனையில் மாப்பிள்ளையை கடத்திய கில்லாடி காதலி
உறவினர், சுற்றார் சூழ்ந்திருக்க துப்பாக்கியுடன் திருமண மண்டபத்தில் நுழைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மாப்பிள்ளையை அலேக்காக தூக்கிச் சென்ற காதலியால் கான்பூர் பரபரப்பு ஏற்பட்டது.
கான்பூர்: சினிமாவில் கூட காதலன்தான் திருமண மண்டபத்தில் நுழைந்து அலேக்காக மணப்பெண்ணைத் தூக்கிச் செல்வார். ஆனால் நிஜ வாழ்க்கையில் பெண் ஒருவர், தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை மணம் முடிக்க மணமேடையில் இருந்த மாப்பிள்ளையை துப்பாக்கி காட்டி மிரட்டி கடத்திச் சென்றுள்ளார்.
கடத்தப்பட்ட மாப்பிள்ளையின் பெயர் அசோக் யாதவ். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராக பணியாற்றி வந்திருக்கிறார். இவருடன் பணி புரிந்த பெண் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் உயிருக்குயிராக காதலித்து வந்த நிலையில், அசோக் யாதவ் வீட்டில் இருந்து பிரச்சனை தொடங்கியுள்ளது.
அசோக் யாதவ் வீட்டில் வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் முடிக்க நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது. இதனால் அசோக் யாதவ் தனது காதலியிடம் பேசாமல் தவிர்த்து வந்தார். மேலும், காதலியிடம் இருந்து வரும் எல்லாவித தொடர்பையும் துண்டித்தார்.
திருமண விழா
இந்நிலையில், ஹமீர்பூர் மாவட்டத்தில் திங்கள் கிழமை இரவு அசோக் யாதவின் திருமண விழா கோலாகலமாக தொடங்கி மாப்பிள்ளை ஊர்வலம் எல்லாம் விமர்சையாக நடைபெற்றது. மறுநாள் மாப்பிள்ளையும் மணமகளும் திருமண மேடையில் அமர்ந்திருக்க திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
துப்பாக்கியுடன்
அப்போது, திடீரென ஒரு கூட்டத்துடன் திருமண மண்டபத்திற்குள் ஏமாற்றப்பட்ட காதலி நுழைந்தார். திருமணத்திற்கு வந்திருந்த கூட்டம் அவ்வளவு பேரும் அவரை பார்த்திருக்க, கையில் துப்பாக்கியுடன் மாப்பிள்ளையை பார்த்து, என்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணுடன் திருமணமா என்று கத்திக் கேட்டார்.
சினிமா போல்
பின்னர், மாப்பிள்ளையின் சட்டையைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்துச் சென்ற காதலி, திருமண மண்டபத்தின் வாசலில் தயாராக இருந்த காரில் மாப்பிள்ளை ஏற்றிக் கொண்டு சட்னெட மறைந்தார். எல்லாம் கண நேரத்தில் ஒரு சினிமாக் காட்சி போல் பரபரப்பாக நடந்து முடிந்துவிட்டது.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த மவுடகா போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் அசோக் யாதவின் சகோதரர் மற்றும் போட்டோ கிராபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.