அசிங்கப்படுத்த முயன்றவனின் நாக்கை கடித்து துப்பி போலீசில் கொடுத்த பெண்
கொச்சி: கேரளாவில் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பக்கத்து வீட்டுக்காரரின் நாக்கை கடித்து துண்டாக்கியுள்ளார் பெண் ஒருவர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பெண் ஒருவர் திங்கட்கிழமை இரவு தனது வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்பொழுது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 30 வயது ஆண் அவர் மீது தாவிக் குதித்துள்ளார்.
அவரை மானபங்கப்படுத்த முயன்றுள்ளார்.
நாக்கு
தன் மீது பாய்ந்து மானபங்கப்படுத்த முயன்ற நபரால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். அவனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவனின் நாக்கின் ஒரு பகுதியை கடித்து துண்டாக்கினார்.
போலீஸ்
2 செ.மீ. அளவுக்கு நாக்கை துண்டாக்கிவிட்டார் அந்த பெண். நாக்கு துண்டான வேகத்தில் அந்த நபர் தப்பியோடிவிட்டார். துண்டாக விழுந்த நாக்குப் பகுதியுடன் அந்த பெண் காவல் நிலையத்திற்கு சென்றார்.
உண்மை
நாக்கை போலீசாரிடம் கொடுத்துவிட்டு நடந்த சம்பவம் பற்றி அந்த பெண் விளக்கினார். அவரின் புகாரின்பேரில் போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் ஏற்கனவே பெண்களிடம் தகாத முறையில் நடந்து போலீசில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை
சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய அந்த நபர் தனக்கு விபத்தில் நாக்கு துண்டாகிவிட்டதாகக் கூறி மருத்துவமனை ஒன்றில் சேர்ந்துள்ளார். இதை கண்டுபிடித்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை முடிந்த பிறகு அவரை கைது செய்துள்ளனர்.