கேரள முதல்வரை கிண்டலடிக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்.. பார்வர்ட் செய்து மாட்டிய பெண் போலீஸ்!
கேரள முதல்வரை கிண்டலடிக்கும் வாட்ஸ் ஆப் மெசேஜை பார்வர்ட் செய்த பெண் காவலர் சிக்கலில் மாட்டியுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரள முதல்வரை கிண்டலடிக்கும் வகையில் வாட்ஸ் ஆப்பில் யாரோ அனுப்பிய செய்தியை பார்வார்டு செய்த பெண் காவலர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் தனது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்த ஒரு மெசேஜை, பெண் காவலர்கள் இடம்பெற்றிருக்கும் வாட்ஸ் ஆப் குரூப்புக்கு பார்வர்டு செய்துவிட்டார்.
அதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் சிரித்துக் கொண்டிருக்கும் கேலி சித்திரம் இடம்பெற்றுள்ளது. அந்த படத்தில் கேரளாவில் காய்ச்சலால் ஏற்படும் இறப்பை கட்டுப்படுத்த இயலாததே தங்கள் அரசு இந்த ஓராண்டில் மேற்கொண்ட சாதனை என்று தன் அரசை தானே குறை கூறிக் கொள்ளும்படியாக இருந்தது.
இந்த சர்ச்சைக்குரிய மெசேஜானது மற்றொரு காவலரின் மூலம் மாநகர காவல் ஆணையர் ஜி. ஸ்பர்ஜன் குமாரின் காதுகளுக்கு எட்டியது. இதைத் தொடர்ந்து அந்த பெண் காவலரை விசாரணைக்குட்படுத்த ஆணையர் உத்தரவிட்டார்.
விசாரணையில் அந்த பெண் காவலர் தனக்கு வந்த மெசேஜை பார்வார்டு செய்துள்ளது தெரியவந்தது. மேலும் இந்த மெசேஜ் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கேரளாவில் தற்போது மர்மக் காய்ச்சலால் இறப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கேரள அரசை கிண்டலடிக்கும் வகையில் பெண் காவலர் ஒருவர் அனுப்பிய மெசேஜ் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.