ராகுலைத் திருமணம் செய்து கொள்ளணும்... போலீஸ் நிலையம் சென்ற உ.பி. பெண்!
ஆக்ரா: உத்திரப்பிரதேசத்தில் 30 வயது பெண் ஒருவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக போலீஸ் நிலையத்தின் உதவியை நாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்துக்கு 30 வயதான பெண் ஒருவர் வந்தார். அங்கிருந்த பெண் போலீசாரிடம், தான் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார். இதைக் கேட்டு பெண் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், தனது உறவினர் ஒருவர் ரயில்வே அமைச்சகத்தில் பணியாற்றியதாகவும், அவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நண்பர் என்றும், இருவரும் சேர்ந்து தனக்கும், ராகுலுக்கும் திருமணத்தை நிச்சயம் செய்து வைத்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
நிச்சயதார்த்தம் நடந்த போதும், இப்போது தன்னை சோனியா வீட்டிற்குள் அனுமதிக்க மறுப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக கடந்த 2012ம் ஆண்டு ராகுல் தனக்கு அனுப்பியதாக புத்தாண்டு வாழ்த்து அட்டை ஒன்றையும் போலீசாரிடம் அவர் காட்டியுள்ளார்.
ஆனால், போலீசாரிடம் இது தொடர்பாக அப்பெண் எழுத்துப் பூர்வமாக புகார் எதுவும் அளிக்கவில்லை.
ராகுல் குறித்து புகார் தெரிவித்த அப்பெண், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தோன்றுவதாகவும் மகளிர் போலீஸ் நிலைய பொறுப்பாளர் தேஜேஸ்வரி சிங் தெரிவித்துள்ளார்.