வாரணாசியில் ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளி கொன்ற ரிசர்வ் படை போலீஸ்
லக்னோ: வாரணாசியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளம்பெண் பரிதாபமாக பலியானார்.
மேற்கு வங்க மாநிலம் விர்பம் மாவட்டத்தைச் சேர்ந்த ரீட்டா பால்(25) தனது 18 மாத பெண் குழந்தை காஜல், மாமா மானிக் பால், சகோதரர் ஜெய்தீப் பாலுடன் அசன்சோல் நகரில் துர்கியானா எக்ஸ்பிரஸ் ரயிலில் செவ்வாய்க்கிழமை ஏறியுள்ளார். அவர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் வசிக்கும் தனது கணவர் பர்வேஷ் பாலை சந்திக்கவே ரயிலில் சென்றுள்ளார்.
ரயில் செவ்வாய்க்கிழமை இரவு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நின்றபோது மத்திய ரிசர்வ் படை போலீஸ் கான்ட்பிள்கள் ஏறியுள்ளனர். அவர்கள் ரயில் கிளம்பிய பிறகு ரீட்டாவை கீழே பிடித்து தள்ளினர். இதில் படுகாயம் அடைந்த ரீட்டா பரிதாபமாக பலியானார்.
இது குறித்து ஜெய்தீப் கூறுகையில்,
ரயில் வாரணாசியில் உள்ள கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரம் எண் 5ஐ அடைந்தபோது மத்திய ரிசர்வ் படை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் எங்கள் பெட்டியில் ஏறி அனைவரிடமும் ரூ.50 வாங்கினார். மற்றொரு கான்ஸ்டபிள் வாக்கி டாக்கி மற்றும் நோட்பேடுடன் எங்கள் பெட்டியில் ஏறினார். டிக்கெட்டுகளை பரிசோதிப்பது போன்று அவர் என்னையும், என் மாமாவையும் பெட்டியில் இருந்து வெளியே தள்ளினார்.
ரயில் கிளம்பத் துவங்கியதும் நாங்கள் அதே பெட்டியில் ஏறினோம். சிறிது நேரத்தில் அதே கான்ஸ்டபிள் எங்களை கீழே தள்ள முயன்றபோது ரீட்டா விழுந்து பலியானார் என்றார்.
சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள்கள் ரயில் அடுத்த நிலையத்தில் நின்றபோது தப்பியோடிவிட்டனர்.