ஓடும் ரயிலில் பலாத்காரத்திற்கு முயன்ற கும்பல்... கணவர், கைக்குழந்தையுடன் கீழே குதித்த இளம் பெண்
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பாலியல் பலாத்கார மிரட்டலுக்குப் பயந்து 27 வயதுப் பெண் தனது 10 மாத கைக்குழந்தை மற்றும் கணவரோடு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கூச்பிகார் மாவட்டத்தில் செங்கல் சூளை ஒன்றில் பணி புரிந்து வரும் தம்பதி ஒன்று தனது கைக்குழந்தையுடன் காஸியாபாத் ரயில் நிலையத்தில் ரயில் ஏறியுள்ளனர். பயணம் தொடங்கியதில் இருந்து 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று அப்பெண்ணை கிண்டல் செய்தபடியே வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.
ஒருகட்டத்தில் கும்பலின் அட்டகாசம் எல்லை மீறியுள்ளது. இதனால், அடுத்த நிறுத்தத்தில் இறங்கி இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் அப்பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் இது தொடர்பாக அலிபுர்தூர் ரயில் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். இதனால், பயந்து போன அப்பெண் தனது கைக்குழந்தை மற்றும் கணவரோடு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து விட்டார்.
அவர்கள் குதித்த பகுதி யானைகள் அடிக்கடி தண்டவாளத்தைக் கடக்கும் பகுதி என்பதால், அப்பகுதியில் ரயில் மிகவும் மெதுவாக சென்றுள்ளது. இதனால், அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பித்த அவர்கள், வனப்பகுதி வழியாக சுமார் 2 கிமீ தூரம் நடந்து வந்து ராஜபட்கவா ரயில் நிலையத்தை அடைந்துள்ளனர். அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் தங்களுக்கு நேர்ந்த கதையை அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக அவர்கள் அலிபுர்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசாரின் உதவியுடன் குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.