”டி-ஷர்ட்” போட்டது ஒரு குத்தமாப்பா?- மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய பெண்ணுக்கு தடை!
தானே: மும்பையில் டி-ஷர்ட், குட்டை ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்ணுக்கு மகாராஷ்டிர மாநிலம், தானே மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேயின் ஐரோலி பகுதியைச் சேர்ந்தவர் சீமா சல்தான்ஹா. நேற்று முன்தினம் பகல் 12.45 மணிக்கு இவர் தனது உறவினர் ஒருவரது பிறப்பு சான்றிதழின் நகல் வாங்குவதற்காக பாஞ்ச்பகாடியில் உள்ள தானே மாநகராட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார்.
அப்போது அலுவலக வாசலில் பணியிலிருந்த ஒரு பெண் காவலர், சீமாவை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். ‘‘அரசு அலுவலகங்களுக்கு வரும்போது இதுபோல் ஆபாசமாக உடையணிந்து வரக்கூடாது.
வெட்கம் கெட்ட வகையில் நீ உடையணிந்து வந்திருக்கிறாய். அதனால் உன்னை அலுவலகத்திற்குள் அனுமதிக்க முடியாது'' என்று சீமாவிடம் வாக்குவாதம் செய்தார். இதற்கு சீமா எதிர்ப்பு தெரிவித்தார். பதிலுக்கு பதில் அவரும் பேசினார்.
அரைமணி நேரத்துக்கு பின் சீமா அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். மாநகராட்சி தலைமை செக்யூரிட்டி அதிகாரி சுக்ராம் ஜாதவிடம் கேட்டதற்கு, ‘‘மாநகராட்சி அலுவலகத்துக்கு வருவோருக்கு உடை கட்டுப்பாடு எதுவுமில்லை. அந்த பெண்ணை பெண் காவலர் தடுத்து நிறுத்தியிருக்க கூடாது'' என்றார்.
நல்லா கிளப்புறீங்கப்பா பீதியை!