கேரளாவில் பயங்கரம்- அதிகாலையில், நின்று கொண்டிருந்த ரயிலில் பெண் எரித்துக் கொலை
திருவனந்தபுரம்: அதிகாலையில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஒரு பெண் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள கன்னூர் ரயில் நிலையத்தில் 1வது பிளாட்பாரத்தில் நேற்று காலை 4.30 மணியளவில் கன்னூர் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது. ரயில் புறப்பட சிறிது நேரம் இருந்தமையால், ரயிலின் விளக்குகள் போடப் படவில்லை.
அப்போது அந்த ரயிலின் 13வது பெட்டியில் பெண் ஒருவர் வலியால் அலறும் சத்தம் கேட்டு அங்கிருந்த மக்கள் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது பெண் ஒருவர் உடலில் தீப்பற்றிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். உடனடியாக அவரது உடலில் இருந்து தீயை அணைத்த மக்கள் அவரைச் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார்.
மரணத்திற்கு முன்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மலப்புரம் கொண்டோட்டோ பகுதியைச் சேர்ந்த ஹசன் என்பவரின் மனைவி பதுட்டி என்கிற கதீஜா (45) என தெரிய வந்தது.
மேலும், இச்சம்பவம் நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் கதீஜா, ரயில் பெட்டியில் யாரோ ஒரு ஆணுடன் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்ததாக ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரயில் பெட்டி விளக்குகள் எரியாததால் அந்த ஆணை அடையாளம் காண இயலவில்லை என்றும், அவர் தான் கதீஜா மீது பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி உயிரோடு எரிக்க முற்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் சந்தேகிக்கின்றனர்.
கதீஜா அமர்ந்திருந்த பெட்டியில் சம்பவம் நடந்த போது வேறு பயணிகள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்து மண்ணென்ணெய் ஊற்றி கொண்டு வரப்பட்ட பாட்டிலைப் போலீசார் மீட்டுள்ளனர்.
அதேபோல், சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அப்பெட்டியில் இருந்து ஆண் ஒருவர் இறங்கி தண்டவாளத்தைத் தாண்டி ஓடிச் சென்றதாகவும் ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் நடந்த இக்கொலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.