மிசோரி ஐ.ஏ.எஸ். அகாடமியில் 6 மாதம் தங்கியிருந்த 'மர்ம பெண்' யார்?
மிசோரி: மிசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக அகாடமியில் ட்ரெய்னீ ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி 6 மாதங்கள் தங்கி திடீர் என மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக அகாடமி செயல்பட்டு வருகிறது. அங்கு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி அடைபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரைச் சேர்ந்த ரூபி சவுத்ரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் தான் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி அந்த அகாடமிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி வந்துள்ளார். அன்றில் இருந்து அவர் அங்கு தான் தங்கியுள்ளார்.
அப்போது அவர் அகாடமியின் நூலகத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 27ம் தேதி திடீர் என்று மாயமாகிவிட்டார். இதையடுத்து அந்த அகாடமியின் நிர்வாக அதிகாரி சத்யவீர் சிங் ரூபி மாயமானது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகு தான் ரூபி பொய் சொல்லி அந்த அகாடமியில் அதுவும் 6 மாதங்கள் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
அந்த ஆறு மாதங்களில் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அந்த பெண் பாதுகாப்பு அதிகம் உள்ள அந்த அகாடமிக்குள் எப்படி நுழைந்தார், அங்கு ஆறு மாதங்கள் எப்படி யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தங்கியிருந்தார் என்று போலீசார் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூபி தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போலீசார் அங்கிருந்த ஆவணங்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகிறார்கள். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள அகாடமியில் ஒரு பெண் தன்னை ஐஏஎஸ் பயிற்சியாளர் என்று கூறி தங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.